Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'போராடும் விவசாயிகளுக்கு எதிராக கட்டைகளை கையில் எடுங்கள்'- ஹரியானா முதல்வர் சர்ச்சை பேச்சு

விவசாயிகள் போராட்டம் குறித்து மோதல்களை தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார் ஹரியானா முதல்வர்.
 
ஹரியானா மாநிலத்தில் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. இங்கு மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு கர்னால் மாவட்டத்தில் பாஜக தலைவருக்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இது அம்மாநில விவசாயிகளுக்கிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஜாஜ்ஜர் மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகளின் முற்றுகை போராட்டத்தின்போது தண்ணீர் பீரங்கி மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து போலீசார் கலைத்தனர். இதனிடையே பாரதிய ஜனதா தலைவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாயிகளை மண்டையை உடைக்குமாறு காவலர்களுக்கு கர்னால் மாவட்ட துணை கோட்டாட்சியர் உத்தரவிட்டது தொடர்பாக காணொலி வெளியாகி பரபரப்பை அதிகரித்தது.
 
image
இந்நிலையில், ஹரியானா மாநில பாஜக விவசாய பிரிவு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான மனோகர் லால் கட்டார் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ''ஹரியானாவின் வடக்கு மற்றும் மேற்கில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் நீங்கள் 700 முதல் 1000 விவசாயிகளைக் கொண்ட தன்னார்வலர் குழுக்களை வெவ்வேறு பகுதிகளில் அமைக்க வேண்டும். அவர்களை போராடும் விவசாயிகளுக்கு எதிராக பழிக்குப்பழி வாங்கும் நடவடிக்கையில் பயன்படுத்த வேண்டும். இதற்காக கட்டைகளை கையில் எடுங்கள். இதற்காக சிறை செல்வது குறித்தும் ஜாமீன் பற்றியும் கவலைப்பட வேண்டாம். அதை நாங்கள் பார்த்துக் கொள்வோம். நீங்கள் ஒரு மாதம், இரண்டு மாதங்கள் அல்லது ஆறு மாதங்கள் சிறையில் இருந்தால், நீங்கள் ஒரு பெரிய தலைவராக மாறுவீர்கள்'' என்றார்.
 
விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்