தொழில்நுட்பம் வளரும்போது அதற்கேற்ப மோசடி பேர்வழிகளும் தங்களை தகவமைத்துக் கொள்கின்றனர். அந்த வகையில் செல்போன்கள் மூலம் ஆன்லைனில் திருடுவோர் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு சைபர்கிரைம் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
வங்கியில் இருந்து பேசுவது போல ஆதார் கார்டு, பான்கார்டு எண்ணை பெற்று அதன் மூலம் வங்கிக்கணக்கில் பணத்தை திருடுவது போன்ற மோசடிகளை அரங்கேற்றி வந்த ஆன்லைன் மோசடி நபர்கள், இப்போது எஸ்.எம்.எஸ். மூலம் மக்களின் கவனத்தை திசைதிருப்பி வங்கிக்கணக்கு விவரங்களை பெற்று பணத்தை மோசடி செய்து வருவதாக சைபர் கிரைம் காவல்துறை தெரிவித்துள்ளது. இதிலிருந்து தப்ப சில அறிவுறுத்தல்களையும் காவல்துறை வழங்கியுள்ளது.
* வங்கிக்கணக்கு பிளாக் செய்யப்படும் என்று குறுஞ்செய்தி வந்தால் அதிலுள்ள லிங்கை கிளிக் செய்யக்கூடாது.
* மொபைல் எண் டீ ஆக்டிவேட் ஆகிவிடும் என்று குறுஞ்செய்தி வந்தால் அதில் உள்ள லிங்க்கை கிளிக் செய்யக்கூடாது.
* ஆன்லைனில் வரும் பகுதிநேர வேலை போன்ற லிங்க்கையும் கிளிக் செய்யக்கூடாது.
* பரிசு பார்சல் வந்திருக்கிறது என்று கூறி பணம் அனுப்பும்படி கூறினாலோ, வேலை கிடைக்க முன்பணம் செலுத்தக் கூறினாலோ, வெளிநாடுகளில் தொழில் செய்து பணம் பெறலாம் என்றோ வரும் அழைப்புகளை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும்.
* இணையதளங்களிலோ பேஸ்புக் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களிலோ வெளிநாட்டவர் என்று கூறி பழகும் நபர்களுடன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேட்ரிமோனியல் தளங்களில் திருமணத்திற்கோ, மறுமணத்திற்கோ பதிவு செய்யும்போது வரனை நேரில் பார்க்காமல் பணம் அனுப்பக்கூடாது என்று சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்