Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இரு மாநில முதலமைச்சர்களை வாட்டும் தோல்வி - பின்தங்குகிறதா பா.ஜ.க?

நடந்து முடிந்த இடைத்தேர்தல் தோல்விகள் புதிதாக பதவியில் அமர்த்தப்பட்ட இமாச்சல பிரதேச மற்றும் கர்நாடக மாநில முதல்வர்களை பெரிய அளவில் பாதித்துள்ளது. அவர்கள் தங்களை நிரூபிக்க தவறியதாக கருதப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் 29 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் 3 மக்களவை தொகுதிகளுக்கும் கடந்த 30ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதன் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் பா.ஜ.க பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. குறிப்பாக, புதிதாக மாற்றப்பட்ட இரண்டு பா.ஜ.க முதல்வர்கள் இந்த தேர்வு முடிவுகளால் கலக்கத்தில் உள்ளனர். இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய் ராம் தாக்கூரும், கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மையும் தங்கள் மாநில இடைத்தேர்தல் தோல்வியின் காரணங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

image

பாரதிய ஜனதா கட்சி ஆளும் இமாச்சல் பிரதேசத்தில் 3 சட்டமன்றம் மற்றும் மண்டி மக்களவைத் தொகுதியிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளில் ஒன்றில் பா.ஜ.க.வும், மற்றொன்றில் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளன. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் சொந்த மாவட்டத்தில் நடந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை தழுவியுள்ளது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

''கட்சி இந்த தோல்வியிலிருந்து மிகப்பெரிய பாடத்தை கற்றுக்கொள்ளும்'' என்று இமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த தேர்தல் முடிவுகளால் கட்சி தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அம்மாநிலத்தை பொறுத்தவரை அடுத்தாண்டு சட்டபேரவைத்தேர்தல் நடைபெற உள்ளது. அவர் தனது பதவிக்கு நியாயம் சேர்க்க அது அவருக்கு வாய்ப்பாக அமையும்.

கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மையை பொறுத்தவரை அவருக்கான சவால் வேறுமாதிரியானது. பா.ஜ.கவின் மத்திய தலைமையுடன் இருந்த சில முரண்பாடுகள் காரணமாக பதவியிலிருந்து கீழிறக்கப்பட்டார் எடியூரப்பா. அவரைத்தொடர்ந்து முதல்வராக பதவி ஏற்ற பசவராஜ் பொம்மைக்கு நடைபெற்ற முடிந்த இடைத்தேர்தல் முதல் பெரிய சோதனையாக பார்க்கப்படுகிறது. பசவராஜ் பொம்மையை பொறுத்தவரை அவரது சொந்த தொகுதியான ஹங்கலில் தோல்வியை தழுவியது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. தேர்தலையொட்டி முதல்வர் தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டும் அது பயனளிக்கவில்லை. மேலும், அந்தத் தோல்வி, மாநிலத்தில் தனது இடத்தைப் பலப்படுத்திக்கொள்ள தவறியதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.

இருப்பினும் மனம் தளராத பசரவாஜ் பொம்மை, ''ஜனநாயகத்தில் தேர்தல் தோல்வி என்பது சகஜமானது'' என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து முடிந்த இரண்டு சட்டமன்றத் தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. மத்திய பிரதேசத்தில் மூன்றில் 2 சட்டமன்றத்தொகுதிகளையும், ஒரு மக்களவை தொகுதியையும் பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்