
முதுகுளத்தூர் அருகே கரகாட்டம், தப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்து அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளித்த தலைமை ஆசிரியரின் செயல் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழச்சாக்குளம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகின்றது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்கள் வீட்டில் இருந்து வந்தனர். இந்த நிலையில் இன்று ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்புகள் தொடங்கும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, கீழச்சாக்குளம் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை தந்தனர். அவர்களை வரவேற்கும் விதமாக பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியர் கலை முருகன் என்பவர் தப்பாட்டம் , கரகாட்டம், பொய்க்கால் ஆட்டங்கள் ஆடி மாணவர்களுக்கு மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றார்.இதனால் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு முதல் நாள் தங்களுடைய படிப்பைத் தொடங்கினர். பள்ளியில் தலைமையாசிரியர், பிற ஆசிரியர்கள் மாணவர்களை உற்சாகமாக வரவேற்றதை கிராம மக்கள் வெகுவாக பாராட்டினர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

0 கருத்துகள்