காவேரிபட்டினம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியதில் தந்தை, மகன் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் அடுத்த ஊத்துபள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவருக்கு திருமணமாகி ரோகிணி (25) என்ற மனைவியும் மிதுன் (2) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் பெரியசாமி தனது மனைவி மற்றும் மகனுடன் இருசக்கர வாகனத்தில் காவேரிப்பட்டினம் அடுத்த பையூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்குச் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது கிருஷ்ணகிரி - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் பையூர் பேருந்து நிலையம் அருகே வந்தபோது, நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் சாலையோரம் நின்றிருந்த கண்டெய்னர் லாரியின் பின்புறத்தில் வேகமாக மோதியுள்ளது. இதில் பெரியசாமி மற்றும் அவரது மகன் மிதுன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மனைவி ரோகிணி படுகாயம் காயமடைந்தார்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த காவேரிபட்டினம் போலீசார், படுகாயமடைந்த ரோகிணியை மீட்டு கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்த பெரியசாமி மற்றும் அவரது மகன் மிதுன் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காவேரிபட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவேரிப்பட்டினம் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவேரிபட்டினம் அருகே இருசக்கர வாகன விபத்தில் தந்தை,மகன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்