விசா ரத்து விவகாரத்தில் ஆஸ்திரேலியாவில் சட்டப்போராட்டம் நடத்தி வென்ற டென்னிஸ் வீரர் ஜோகோவிச், ஆஸ்திரேலிய பயணத்திற்கு முன்பு சமர்ப்பித்த ஆவணங்களில் முறைகேடு செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஆஸ்திரேலிய பயணம் மேற்கொள்வதற்கான விண்ணப்பத்தில் 14 நாட்களுக்கு முன்னர் எவ்வித வெளிநாட்டு பயணமும் மேற்கொள்ளவில்லை என ஜோகோவிச் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி ஸ்பெயினில் பயிற்சி மேற்கொண்டதாக புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகின. இதன் உண்மைத் தன்மை குறித்து அறிய ஆஸ்திரேலியா எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதது, விசா விவகாரம் என அடுத்தடுத்து சிக்கல்களைச் சந்தித்து வந்த ஜோகோவிச் தற்போது தவறான ஆவணங்களை சமர்ப்பித்த குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ளார். அவரது விசாவை ரத்து செய்ய ஆஸ்திரேலிய குடியேற்ற துறை அமைச்சருக்கு தனி அதிகாரம் உள்ள நிலையில், அந்நாட்டு அரசு எம்மாதிரியான நடவடிக்கையை எடுக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு கிளப்பியுள்ளது. இதனிடையே ஜோகோவிச், மெல்பர்னில் ஆஸ்திரேலிய ஓபன் மைதானத்தில் தனது பயிற்சியை தொடங்கியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்