டெல்லி அணியில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய வீரரான மிட்சல் மார்ஷ் உள்பட 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனாவால் கடந்த 2 வருடங்களாக ஐபிஎல் போட்டி இந்தியாவில் முழுமையாக நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி அதிகளவில் செலுத்தப்பட்டதையடுத்து, கொரோனா பரவல் குறைந்தநிலையில், பார்வையாளர்கள் அனுமதியுடன் இந்தியாவில் 15-வது சீசன் ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது.
கொரோனா காரணமாக மற்ற மாநிலங்களில் இல்லாமல், மகாராஷ்டிரா மாநிலம், மும்பை, நவி மும்பை, புனே ஆகிய இடங்களில் உள்ள 4 மைதானங்களில் மட்டுமே ஐபிஎல் சூப்பர் லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. பிளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டி எங்கு நடைபெறும் என்று இதுவரை பிசிசிஐ அறிவிக்கவில்லை. கடந்த 26-ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், இதுவரை 29 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளன.
இதில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை ஆடிய 5 போட்டிகளில், 2 வெற்றி, 3 தோல்வி என புள்ளிப் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. இதற்கிடையில் கடந்த 15-ம் தேதி, அந்த அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபார்ஹார்ட்டுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை எடுத்தபோது நெகட்டிவ் என வந்ததால், கடந்த 16-ம் தேதி பெங்களூரு அணிக்கு எதிரானப் போட்டியில் அந்த அணி பங்கேற்றது.
இதையடுத்து வரும் புதன்கிழமை பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கலந்துகொள்வதற்காக, புனே செல்ல இருந்த டெல்லி அணி வீரர்களுக்கு ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொண்டபோது, ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான மிட்சல் மார்ஷ்-க்கு பாசிட்டிவ் என வந்தது. இதையடுத்து வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, ஐபிஎல் நிர்வாகம் வழிகாட்டுதல்களின்படி ஆர்டி-பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் முதல் பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தநிலையில், இரண்டாவது முறையாக ஆர்டி-பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான மிட்சல் மார்ஷ், டெல்லி அணியின் மருத்துவர், அந்த அணியின் சோஷியல் மீடியா குழுவைச் சேர்ந்த ஒருவர், டெல்லி அணி தங்கியுள்ள ஓட்டலைச் சேர்ந்த 3 ஊழியர்கள் உள்பட 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் மிட்சல் மார்ஷ்- க்கு, சிடி(CT value of 17) மதிப்பு 17 ஆக உள்ளதால், மருத்துவமனையில் அனுமதிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மற்ற வீரர்களுக்கு இதுவரை நெகட்டிவ் என வந்தாலும், நாளை மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் புதன்கிழமை திட்டமிட்டப்படி போட்டி நடைபெறுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. பயோ பபுளையும் மீறி கொரோனா பாதிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்