இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை கடந்துள்ளது. இது நேற்றைய பாதிப்பைக்காட்டிலும் 90 சதவீதம் அதிகம் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இன்றைய புள்ளி விவரங்கள்படி, நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் மட்டும் 2,183 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது நேற்றைய கொரோனா பாதிப்பை காட்டிலும் 90 சதவீதம் அதிகமாகும். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,30,44,280 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,985 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மொத்தமாக இதுவரை 4,25,10,773 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இன்று மட்டும் 214 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,21,965 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது 11,542 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.76 ஆகவும், உயிரிழப்பு சதவீதம் 1.21 ஆகவும் உள்ளது. நேற்று மட்டும் 2,66,459 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதுவரை மொத்தமாக 1,86,54,94,355 டோஸ்கள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் ஏற்கனவே கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் புள்ளி விவரங்கள் இன்று கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதால் தேசிய அளவில் தினசரி கொரோனா உயிரிழப்பு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் தலைநகர் டெல்லியில் அதிகரித்துள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து நாளை மறுநாள் துணை நிலை ஆளுநர் அனில்பைஜால் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பில் மாநிலங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளன.
சமீபத்திய செய்தி: சென்னையை காப்பாற்ற தவறிய ஜோர்டனின் யார்க்கர்கள்! - டெத் ஓவரில் என்னதான் நடந்தது?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்