தமிழகத்தைச் சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரரான விஸ்வா தீனதயாளன் மேகாலயாவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் 83ஆவது தேசிய டேபிள் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது. இதற்காக அசாமின் கவுகாத்தி நகரிலிருந்து கார் மூலம் ஷில்லாங்கிற்கு தமிழக அணி வீரர்கள் 4 பேர் சென்றனர். ரி-போய் என்ற மாவட்டத்தில் சாலை வளைவில் திரும்பும்போது எதிரே வேகமாக வந்த லாரி, கண்ணிமைக்கும் நேரத்தில் கார் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கார் ஓட்டுநர் உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட தமிழக வீரர்களில் 18 வயதே ஆன விஸ்வா தீனதயாளன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.
தமிழக டேபிள் டென்னிஸ் அணியின் ரமேஷ் சந்தோஷ்குமார், அபினேஷ், கிஷோர்குமார் ஆகியோர் படுகாயங்களுடன் ஷில்லாங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜூனியர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பல பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த விஸ்வா தீனதயாளன், அடுத்த வாரம் ஆஸ்திரியாவில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டியில் பங்கேற்க இருந்தார். அவரது அகால மரணத்திற்கு மேகாலயா முதலமைச்சர் கான்ரட் சங்மா, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மிகச்சிறந்த வீரரை நாடு இழந்திருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனிடையே, மறைந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளனின் உடல் இன்று தமிழகம் கொண்டுவரப்பட உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "நமது நம்பிக்கைக்குரிய இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளனின் அகால மரணம் பற்றி கேள்விப்பட்டு வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவு அதிர்ச்சி அடைந்தேன். இளம் சாதனையாளராக உருவாகி கொண்டிருந்த அவர் இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டு பிரிந்தது எனக்கு வேதனை அளிக்கிறது.
அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் விளையாட்டுத் துறையை சேர்ந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியிருக்கிறார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்