இலங்கையில் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.
இலங்கையில் பொருளாதாரம் சீர்குலைந்து அதள பாதாளத்திற்கு சென்றதால், இந்திய மதிப்பில் நூறு ரூபாய் பெருமானம் உள்ள பொருட்கள் அனைத்தும் 400 ரூபாய்க்கு அதிகமாக விற்பனையாகிறது. இதனால், அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். தொழில்கள் முடங்கியதால், மக்களின் வாழ்வாதாரமும் முடங்கி போயுள்ளது.
இந்நிலையில், கல்லேவில் அதிபர் செயலகத்திற்கு எதிரே அமைந்திருக்கும் கடற்கரை பகுதியில் நேற்றிரவு சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள் என ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி, அதிபருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். பொருளாதார சீர்குலைவுக்கு பொறுப்பேற்று கோட்டாபய ராஜபக்ச உடனடியாக பதவி விலக கோரி, பதாகைகளை ஏந்தியபடி வலியுறுத்தினர். இலங்கையில் நேற்று புத்தாண்டு கொண்டாட்டத்தையும் மறந்து, தங்களது வாழ்வாதாரத்தை மீட்பதற்காக அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
ஆட்சி, அதிகாரத்தில் இருக்கும் ராஜபக்ச சகோதரர்கள், பதவி விலக வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட பலர் ஒரே குரலாக முழக்கம் எழுப்பினர். இதற்கிடையே பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இலங்கையின் மார்க்சிஸ்ட் கட்சி, ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி அடுத்த வாரம் பிரமாண்ட பேரணி நடத்த முடிவு செய்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்