“இந்தியாவில் தேச பக்தியையும் கடவுள் பக்தியையும் பிரிக்க முடியாது” என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ரமண மகரிஷியின் 143-வது ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இந்தியாவை பொறுத்தவரை தேச பக்தியும், தெய்வபக்தியும் பிரிக்க முடியாத விஷயங்கள். உலகில் உள்ள மற்ற நாடுகள் போல இந்தியா அல்ல. ஆளும் ஒருவரை பொறுத்து ஒரு நாட்டை குறிப்பிடுவது இந்தியாவின் வழக்கம் அல்ல. அது வெளிநாடுகளின் வழக்கம். இந்தியாவில் பல அரசர்கள் இருந்துள்ளனர். ஆனால், அவர்கள் முழுமையாக ஆட்சி செய்யவில்லை. இந்தியா அரசர்களால் ஒன்றிணைக்கப்படவில்லை.
இந்தியாவில் பல சம்பிரதாயங்கள் பல்வேறு முறைகளில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அப்படி பல சம்பிரதாயங்கள் இருந்தாலும் அவை அனைத்தும் ஒன்றை நோக்கியே உள்ளது. இந்தியாவின் கலாச்சாரங்கள் பாடல் மற்றும் நடனம் வழியாக வெளிப்பட்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தொடர்ந்து மகிழ்ச்சியான காலம் இருந்ததில்லை. பல பிரச்னைகள் உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வந்துள்ளன. அந்த பிரச்னைகள் அனைத்தும் இந்தியாவின் ஒற்றுமையை அதிகரித்துள்ளது.
அரசியலமைப்பு சட்டம் கூறும் அனைத்தும் ராமராஜியத்தில் இருந்துள்ளது, அனைவருக்கும் அனைத்தும் என்பது ராமராஜியத்தில் இருந்துள்ளது. 1976 ஆம் ஆண்டு தான் இந்தியாவில் (Secularism) என்ற வார்த்தை அறிமுகம் செய்யபட்டுள்ளது. Secularism என்ற வார்த்தை வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளது. வெளிநாடுகளில் இரண்டு சர்ச்களுக்குள் சண்டை வந்த நேரத்தில்தான் Secularism என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
நம்முடைய மதசார்ப்பின்மை என்பது அனைத்து மதத்தையும் சரிசமமாக மதிப்பதுதான். Secularism என்ற வார்த்தைக்கு இந்தியாவில் பல்வேறு அர்த்தங்கள் கூறப்பட்டு வருகிறது. தமிழில் மத சார்பின்மை என கூறுகின்றனர். உண்மையில் அது சமய சார்பற்ற என்றுதான் கூற வேண்டும். உலக நாடுகள் மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்து வருகின்றனர். இந்தியா தற்போது வளர்ந்து வருகிறது. தற்போதைய இந்தியாவின் வளர்ச்சி என்பது தேசபக்தி மற்றும் தெய்வபக்தி இணைந்த ஒன்றாக இருக்க வேண்டும்” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்