அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் எஸ்மா சட்டத்தை மேலும் 6 மாதத்துக்கு நீட்டித்து உத்தரப்பிரதேச அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்கும் ‘அத்தியாவசிய பணிகள் பராமரிப்பு சட்டத்தை’ (எஸ்மா) உத்தரப்பிரதேச அரசு கடந்த ஆண்டு மே மாதம் அமல்படுத்தியது. பின்னர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவடைந்த இச்சட்டத்தை மேலும் 6 மாதத்துக்கு நீட்டித்தது. இந்த நிலையில், இதை மேலும் 6 மாதத்துக்கு நீட்டித்து அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
எஸ்மா சட்டத்தின்படி மாநில அரசின் அனைத்து ஊழியர்கள், மாநகராட்சி முதல் உள்ளாட்சி வரையுள்ள பணியாளர்கள், மாநில அரசு நிர்வாகத்தின் கீழ் வரும் அனைத்துப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது. இதனை மீறுபவா்களுக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்க முடியும். இச்சட்டத்தின் விதிகளை மீறும் எவரையும் காவல் துறையினா் கைது செய்ய அதிகாரம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்