காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால் அடுத்த 5 நாட்களுக்கு அரபிக்கடலுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என ஏற்கெனவே கணிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள நிலையில் நாளைமுதல் 4 நாட்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகாவில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை மறுநாள் தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 14ஆம் தேதியை பொறுத்தவரை, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் 40 கி.மீ வேகத்தில் இடி, மின்னல், சூறைக் காற்றுடன் கூடிய பலத்தை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்து புயலாக மாறும்பட்சத்தில் அந்த புயலுக்கு TAUKTEA என பெயரிட வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் 4 மாவட்டங்களில் அதி கனமழையும், தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் 50 கி.மீ முதல் 60 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்பிருப்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்