கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் சேலம் அரசு மருத்துவமனையில், படுக்கை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
கொரோனா இரண்டாம் அலை காட்டுத்தீ போல பரவி வருகிறது. சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட அளவில் நாள்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று மட்டும் 607 பேர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பி கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக நோயாளிகளை அழைத்துவரும் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலம் அரசு மருத்துவமனையை பொறுத்தவரையில் கொரோனா சிகிச்சை பிரிவில் 650 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் 500 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டவையாகும். இந்த நிலையில் இன்றைய தினம் மேலும் 150 படுக்கைகள் தயார் செய்யப்பட்ட நிலையில் அவை அனைத்தும் உடனடியாக நிரம்பியதாக மருத்துவமனை முதல்வர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இருக்கைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். சேலத்தில் உள்ள நடுத்தர அளவிலான தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்ட காரணத்தால் அங்கு அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் ஆக்சிஜன் உதவியோடு சிகிச்சை பெற முடியாத நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளில் இருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அதிகபட்ச மூச்சுத்திணறலோடு சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவோர், வரும் வழியிலேயே உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் இட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 3 முகவர்கள் மூலமாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு வினியோகம் செய்யப்படுகின்றன. கடந்த சில நாட்களாக போதிய அளவு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் விநியோகம் செய்யததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தால் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்யப் படுவதாகவும் தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்