Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

வடகிழக்கு மாநிலங்களில் பாஜக தடம் பதிக்க காரணமானவர்.. அசாமின் புதிய முதல்வர் ஹிமாந்தா யார்?

அசாமின் புதிய முதல்வராக திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார், ஹிமாந்தா பிஸ்வா சர்மா. அசாமில் மகத்தான வெற்றிக்குப் பிறகு எழுந்த முதல்வர் பதவி போட்டியில் முந்திய ஹிமாந்தா, வடகிழக்கு மாநிலங்களில் பாஜக தடம் பதிக்க முக்கியக் காரணியாக இருந்தவர். அவர் குறித்து சற்றே விரிவாக இங்கே...

நடந்து முடிந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மிக எளிதில் தனிப்பெரும்பான்மையை வசப்படுத்தி மீண்டும் தனது தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது பாரதிய ஜனதா கட்சி. அதன்பின் மாநிலத்தின் முதல்வர் யார் என்ற கேள்விதான் அதிகம் ஒலிக்கத் தொடங்கியது. காரணம், தற்போது பாரதிய ஜனதா கட்சியின் முதல்வராக இருந்த சர்பானந்த சோனாவால் மீது எந்தவிதமான குற்றச்சாட்டும் கிடையாது. அவர் சுமுகமான முறையில் கடந்த 5 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சியை நடத்தி இருக்கிறார். ஆனால், அவருக்கு அடுத்த இடத்தில் இருந்தவரான ஹிமாந்தா பிஸ்வா இப்போது அரியணையில் ஏறியிருப்பது சாதாரண விஷயம் அல்ல.

image

ஹிமாந்தா பிஸ்வா சர்மா கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின சட்டப்பேரவை உறுப்பினராக இருந்ததோடு மட்டுமல்லாமல், முன்னாள் முதல்வர் தருண் கோகாய் அமைச்சரவையில் நிதி, சுகாதாரத் துறை உள்ளிட்ட முக்கிய அமைச்சகங்களையும் கையில் வைத்திருந்தார். அசாமில் 15 ஆண்டுகளாக தன்வசம் வைத்திருந்த தருண் கோகாய்க்கு ஹிமாந்தா மிகவும் நெருக்கமானவர்.

பிறகு, அந்தக் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு தீவிரமாக தேர்தல் பணியாற்றி, 15 ஆண்டு காலம் ஆட்சியை கையில் வைத்திருந்த காங்கிரஸிடம் இருந்து அதிகாரத்தைப் பறித்து பாரதிய ஜனதா கட்சியிடம் ஒப்படைத்தார், ஹிமாந்தா பிஸ்வா சர்மா. இதனால், அசாம் மாநில மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் பிரபலமான முகமாக கண்டறியப்பட தொடங்கியுள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கு உயரவும் காரணமாக இருக்கிறார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் என்ற முறையில் அசாம் மாநிலத்தில் ஹிமாந்தா பிஸ்வா சர்மா ஆற்றிய களப்பணிகள் பொதுமக்கள் மத்தியிலும், கட்சியிலும் அவருக்கான செல்வாக்கை பல மடங்கு உயர்த்தியது. தினமும் பல ஆய்வுகளுக்குப் போவது, ஊடகங்களை சந்திப்பது, அதிகாரிகளுடன் ஆலோசனை ஈடுபடுவது, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் வேண்டிய உதவிகளை கேட்டுப் பெறுவது என அப்போதைய முதல்வர் சோனவாலை முற்றிலுமாக ஓரம்கட்டிவிட்டு, நொடிக்கு நொடி அவர் காட்டிய அதிரடி பல்வேறு தரப்பினராலும் கவனம் ஈர்க்கப்பட்டது. அந்தத் தருணத்தில் மொத்த அரசு எந்திரத்தையும் ஹிமாந்தா பிஸ்வா சர்மாதான் நடத்தினார்.

அப்போது, சர்பானந்த சோனோவாலை ஹிமாந்தா பிஸ்வா சர்மா முந்துகிறார் என்ற பேச்சு வெளிப்படையாகவே எழுந்தது. இது இரண்டு தலைவர்களின் தொண்டர்களிடமும் வெளிப்படையாக புகையத் தொடங்கியது. தேர்தல் காலத்தில் இந்த இடைவெளி மேலும் அதிகரிக்க தொடங்கியது.

கடந்த மாதம் அசாம் மாநிலத் தேர்தல் தொடர்பான பரப்புரை பாடல் ஒன்றை வெளியிட்டுள்ள ஹிமாந்தா பிஸ்வா சர்மா, ஆதரவாளர்கள் 'ஹிமாந்தா வர்றாரு விடியல் தரப் போறாரு' என்ற அர்த்தம் கொண்ட பாடலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

image

தேர்தல் பிரசாரக் கூட்டங்களில்கூட முதல்வருக்கு கூடும் கூட்டத்தைவிட, ஹிமாந்தா பிஸ்வா சர்மாவிற்கு அதிகம் கூட்டம் கூடுவதை பார்க்க முடிந்தது. குறிப்பாக, இளைஞர்கள் 'மாமா' என்ற அடைமொழியுடன் இவரை அழைத்து வந்தனர். எளிதாக மக்களை ஈர்க்கக் கூடிய தலைவராக இவர் அறியப்படுவதால், இந்த முறை முதல்வர் பதவி இவருக்கே வழங்கப்படும் எதிர்பார்க்கப்பட்டது. அது இப்போது நடந்திருக்கிறது.

அசாம் மாநிலத்தில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கலவரங்களை உள்துறை அமைச்சகத்தை தனது கையில் வைத்திருந்த முதல்வர் சர்பானந்த சோனோவால் சரிவர கையாளவில்லை என்ற கோபம் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைமையில் உள்ளவர்களுக்கே இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, களத்தில் நிற்பவரும், அதிரடி முடிவுகளை உடனடியாக எடுப்பவரும், பொதுமக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு கொண்டவருமான ஹிமாந்தா பிஸ்வா சர்மாவை இந்த முறை முதல்வர் ஆகலாம் என்ற பேச்சும் அடிபட்டதை இங்கே நினைவுகூர வேண்டும்.

தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்களில் கூட முன்னாள் முதல்வரின் ஆதரவாளர்களைவிட ஹிமாந்தா பிஸ்வா சர்மாவின் ஆதரவாளர்கள்தான் அதிகம் உள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது. இந்தப் பின்னணியில்தான் அசாம் முதல்வராக பதவியேற்றிருக்கிறார் ஹிமாந்தா.

- நிரஞ்சன் குமார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்