Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்தியாவிலிருந்து பிரிவதாக மாநிலங்கள் கூற முடியாது - ஸ்டாலின் விளக்கத்துக்கு வானதி கருத்து

‘ஒன்றிய அரசு’ என்று சொல்வதால் இந்திய அரசின் அதிகாரங்கள் குறையப் போவதில்லை' என கூறியுள்ளார் வானதி சீனிவாசன்.
 
தமிழக சட்டசபையில் நேற்றைய விவாதத்தின்போது 'ஒன்றிய அரசு' தொடர்பான விவாதம் எழுந்தது. அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''அரசியல் அமைப்பு சட்டத்தில் இந்தியா மாநிலங்களைக் கொண்ட ஒன்றியம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டாட்சி தத்துவத்தின் கீழ்தான் ஒன்றியம் என்ற வார்த்தை இடம்பெறுகிறது. எனவே தொடர்ந்து அதை நாங்கள் பயன்படுத்துவோம்'' என்று கூறினார்.
 
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஒன்றிய அரசு தொடர்பான விளக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன், ''பிரிவினைவாத உள்நோக்கத்துடன் திமுக ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் பயன்படுத்தி வரும் ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தையை கடந்த 2-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தமிழக அரசும் பயன்படுத்தி வருகிறது.
 
இதுபற்றி சட்ட மன்றத்தில் பாஜக குழுத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின், "நமது அரசியலமைப்புச் சட்டத்தில், “இந்தியா, அதாவது பாரதம் - மாநிலங்களைக் கொண்ட ஓர் ஒன்றியமாய் இருக்கும்" என்றுதான் உள்ளது. அதைத்தான் பயன்படுத்துகிறோமே தவிர, சட்டத்தில் இல்லாததை நாங்கள் பயன்படுத்தவில்லை. கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருப்பதால் ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தைைப் பயன்படுத்துகிறோம்" என்று கூறியிருக்கிறார்.
 
இந்தியா என்கிற பாரத நாட்டின் நிர்வாக வசதிக்காகவே மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. மாநிலங்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக மாவட்டங்களைப் பிரிப்பது போல, இந்திய அரசு நிர்வாக வசதிக்காக மாநிலங்கள் இரண்டு அல்லது மேலும் பல மாநிலங்களாகப் பிரிக்க முடியும். ஆனால், இந்தியா என்ற பாரத நாட்டை யாராலும் பிரிக்க முடியாது. இந்தியாவில் இருந்து பிரிகிறோம் என்று மாநிலங்கள் கூற முடியாது. அப்படி கூறினால் அது பிரிவினைவாதம். தேசத் துரோகம்.
 
எனவே, முதலமைச்சர் கூறியதுபோல கூட்டாட்சி தத்துவத்திற்காக ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தையை பயன்படுத்தினால் பிரச்சினையில்லை. ‘ஒன்றிய அரசு’ என்று சொல்வதால் இந்திய அரசின் அதிகாரங்கள் குறையப் போவதில்லை. இவ்வளவு விளக்கம் அளித்த முதலமைச்சர், ‘மத்திய அரசு' என்றால் என்ன, 'ஒன்றிய அரசு' என்றால் என்ன, இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன என்பதற்கும் விளக்கம் அளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்'' என அவர் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்