கொரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிடமுடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
கோவையை சேர்ந்த பூமிராஜ் தாக்கல் செய்திருந்த இரு மனுக்களில், கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், கோவை பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த இரு வழக்குகளும் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசின் கொள்கை முடிவு தொடர்பான விவகாரங்களை எதிர்த்து தொடரப்படும் பொது நல வழக்குகள் பெரும்பாலும் விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்படுவதாக குறிப்பிட்டனர்.
நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றும், அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டுமென உத்தரவிட முடியாது எனவும் கூறினர். மத்திய மாநில அரசின் திட்டங்கள் நீதிமன்ற தலையீடு இல்லாமல் தொடர வேண்டுமென விரும்புவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், தேவைப்பட்டால் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துள்ள வழக்கில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்