Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மூன்றாம் அலையும் 'டெல்டா ப்ளஸ்' கொரோனாவும் - தெளிவான புரிதலுக்கு ஓர் அலர்ட் பார்வை

'டெல்டா வேரியன்ட் இதுவரை கண்டறியப்பட்டுள்ள உருமாற்றங்களிலேயே அதிகம் பரவும் தன்மையுடன் இருப்பதும் தீவிரத்தன்மையுடன் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது' என்கிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.
 
கொரோனா இரண்டாம் அலை சற்றே ஓய்ந்துவரும் நிலையில், ஒருபக்கம் மூன்றாம் அலை அச்சுறுத்தலும், மறுபக்கம் டெல்டா, டெல்டா ப்ளஸ் முதலான அப்டேட்டுகளும் சற்றே கவலைக்குரியதாகவும் உள்ளது. இதுகுறித்து அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லாவிடம் பேசினோம்.
 
image
"இந்தியாவிலும் சரி தமிழகத்திலும் சரி இரண்டாவது அலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது 'டெல்டா' என்று பெயரிடப்பட்ட வேரியன்ட் ஆகும். இந்தியாவின் இரண்டாவது அலையை ஏற்படுத்திய இரண்டு வேரியன்ட்கள், ஆல்ஃபா வேரியன்ட் மற்றும் டெல்டா வேரியன்ட் ஆகும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதுவரை மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட 554 கொரோனா பாசிடிவ் மாதிரிகளில் 386 மாதிரிகளில் டெல்டா வேரியன்ட் கண்டறியப்பட்டுள்ளது. இது 70% ஆகும்.
 
அதற்குப்பிறகான இடத்தில் ஆல்ஃபா வேரியன்ட் 47 மாதிரிகளில் கண்டறியப்பட்டது. இது 8.5% ஆகும். இந்த டெல்டா வேரியன்ட் 81 சதவீதம் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே கண்டறியப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரண்டாம் அலையில் 'டெல்டா வேரியன்ட்' தாக்கத்தை செலுத்தியது ஆய்வுபூர்வமாக கண்டறியப்பட்டுள்ளது.
 
இந்த டெல்டா வேரியன்ட்தான் தற்போது ஐரோப்பிய யூனியன் நாடுகளிலும் பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் அடுத்த அலையை தோற்றுவிக்க இருக்கிறது. இந்நிலையில், தற்போது இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, போலாந்து, நேபாளம், சீனா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளில் டெல்டா வேரியன்ட்டின் புதிய பரிணாமம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வேரியன்ட்டிற்கு 'டெல்டா ப்ளஸ்' என்று பெயர் வழங்கப்பட்டுள்ளது.
 
ஏற்கெனவே இருக்கும் டெல்டா வேரியன்ட்டில் K417N எனும் மரபணு மாற்றம் (Mutation) நிகழ்ந்தமையால் இந்த புதிய வேரியன்ட் தோன்றியுள்ளது. இந்த மரபணு மாற்றமானது கொரோனா வைரஸ் சுவாசப் பாதையில் ஒட்டும் இடமான "ஸ்பைக் புரதத்தை" முடிவு செய்யும் மரபணுக்கூறில் நிகழ்ந்துள்ள மாற்றமாக இருக்கிறது.
 
இந்திய அரசின் சுகாதாரத்துறை இந்த வேரியன்ட்டை 'அச்சுறுத்தல் தரும் உருமாற்றமாக' (VARIANT OF CONCERN) அறிவித்துள்ளது. இந்தியாவில் இந்த வேரியட் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
 
இந்த டெல்ட்டா ப்ளஸ் வேரியண்ட்டில் நிகழ்ந்துள்ள K417N என்ற இதே மரபணு மாற்றம் இதற்கு முன் தென் ஆப்பிரிக்காவில் இருந்து கண்டறியப்பட்ட பீட்டா வேரியண்ட்டிலும் பிரேசிலில் இருந்து அடையாளம் காணப்பட்ட காமா வேரியண்ட்டிலும் இருக்கிறது.
 
இந்த மரபணு மாற்றம் மூலம் வைரஸுக்கு தடுப்பூசிகள் (Vaccine induced immunity) மற்றும் முந்தைய முதல் நோய் தொற்று (First time infection) மூலம் கிடைக்கும் எதிர்ப்பு சக்தியை மீறி நோயை வரவழைக்கும் திறன் அதிகமாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதுவரை டெல்டா வேரியண்ட் வைத்து செய்யப்பட்டுள்ள ஆய்வுகளின் முடிவுகளை பார்க்கும்போது, கிட்டத்தட்ட 80 நாடுகளுக்கு மேல் தனது இருப்பை நிலை நிறுத்திக்கொண்டு உலகின் தனிப்பெரும் வேரியண்ட் எனும் தகுதியை ஆல்ஃபா வேரியண்ட்டிடம் இருந்து டெல்டா வேரியண்ட் தட்டிப்பறித்து தற்போது முதல் இடத்தில் இருக்கிறது. பிரிட்டனில் தற்போது கண்டறியப்படும் 90% கொரோனா தொற்றுகள் டெல்டா வேரியண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அங்கு லாக்டவுனை தளர்த்துவது மேலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
டெல்டா வேரியண்ட் இதுவரை கண்டறியப்பட்டுள்ள உருமாற்றங்களிலேயே அதிகம் பரவும் தன்மையுடன் இருப்பதும் தீவிரத்தன்மையுடன் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
 
image
டெல்டா வேரியண்ட் Vs தடுப்பூசி செய்யப்பட்ட ஆய்வில் ஃபைசர் நிறுவன தடுப்பூசியான கோமிர்நாட்டி, இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு அறிகுறிகளுடைய கொரோனா தொற்றுக்கு எதிராக 88% பாதுகாப்பை வழங்குகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆவதை 96% தடுக்கிறது.
 
ஆஸ்ட்ரா செனிகா நிறுவனத்தின் வேக்செவ்ரியா தடுப்பூசி, இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு அறிகுறிகளுடைய கொரோனா தொற்றுக்கு எதிராக 60% பாதுகாப்பை வழங்குகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகும் தன்மையை 92% தடுக்கிறது என்பது நற்செய்தியாகும்.
 
டெல்டா வேரியண்ட் குறித்து மேற்குலகம் அச்சம் கொண்டுள்ள வேலையில் நமது கவனம் டெல்டா ப்ளஸ் வேரியண்ட் மீது குவிந்துள்ளது. நமது இந்திய ஒன்றிய அரசின் சுகாதாரத்துறையில் அறிவுறுத்தல்களின்படி கட்டாயம் இனியும் சமூகம் சார்ந்த கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை வழங்குவது குறித்து அதிகம் சிந்தித்து செயல்பட வேண்டும்.
 
சமூக இடைவெளி, தனிமனித இடைவெளி, முகக்கவசம் போன்றவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். எத்தனை விரைவாக தடுப்பூசியை பெற்றுக்கொள்கிறோமோ அது நம்மை மூன்றாம் அலையில் இருந்து காக்கும் அஸ்திரமாக இருக்கக்கூடும். அந்த விஷயத்தில் அலட்சியம் கூடாது. தடுப்பூசி பெறுவதற்கு விரைவு காட்டிட வேண்டும். பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். நோய் தன்மையை உடனே கண்டறிய வேண்டும். நோயாளர்களை உடனே தனிமைப்படுத்திட வேண்டும்.
 
இன்னும் சரியாக சொல்லப்போனால், மூன்றாவது அலைக்கு கொரோனா வைரஸ் தயாராகி விட்டது. நாமும் சேர்ந்து தயாராக வேண்டும். போர் இன்னும் முடியவில்லை. தொடர்ந்து எச்சரிக்கை உணர்வுடன் இருப்போம். நிச்சயம் நம்மால் மூன்றாவது அலையை வெல்ல முடியும்'' என்கிறார் அவர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்