Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'ஜஸ்ட் டயல்' நிறுவனத்தை வாங்க ரிலையன்ஸ் திட்டம்?

பட்டியலிடப்பட்ட நிறுவனமான 'ஜஸ்ட் டயல்' நிறுவனத்தை ரிலையன்ஸ் குழுமம் வாங்க திட்டமிட்டிருக்கிறது. ப்ரொமோட்டர் வசம் உள்ள பங்குகளை 900 மில்லியன் (6,660 கோடி ரூபாய்) டாலர் கொடுத்து வாங்க திட்டமிட்டிருப்பதாக 'தி எகனாமிக் டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது. 25 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது.

வரும் ஜூலை 16-ம் தேதி 'ஜஸ்ட் டயல்' நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டம் நடக்க இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் நிறுவனத்தை விற்பது தொடர்பான முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. நிறுவனங்களின் விவரங்களை தேடுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் தொலைபேசி, மொபைல் ஆப் மற்றும் இணையதளம் ஆகிய மூன்று வழிகளிலும் செயல்பட்டு வருகிறது.

வி.எஸ்.எஸ் மணி என்பவரால் 1996-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் இவரது குடும்பத்தின் வசம் 35.5 சதவீத பங்குகள் உள்ளன. இவர் வசம் உள்ள பங்குகளில் பெரும்பான்மையான பங்குகளை வாங்கியபிறகு, ஓபன் ஆஃபர் மூலம் 26 சதவீத பங்குகளை வாங்க ரிலையன்ஸ் திட்டமிட்டிருக்கிறது. மொத்தம் 60 சதவீத பங்குகளை கையகப்படுத்த திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அதேசமயம் நிறுவனர் மணி, நிறுவனத்தின் செயல்பாடுகளை கவனித்துக் கொள்வதற்காக தொடருவார் என்றும் தெரிகிறது.

இந்த ஆண்டின் இதுவரை இந்த நிறுவனப் பங்கு 50 சதவீதத்துக்கு மேல் உயர்ந்திருக்கிறது. ஆண்டு தொடக்கத்தில் டாடா குழுமம் கையகப்படுத்த திட்டமிட்டிருந்தது. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் ஏப்ரல் மாதம் முதல் ரிலையன்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தையில் இருப்பதாக தெரிகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்