Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

முன்னாள் வீரர்களின் வரிசையில் இடம்பிடிப்பாரா தோனி? - அவரும்... அரசியலும்...!

வழக்கமாக மக்களின் மனம் கவர்ந்த பிரபலங்கள் என்றாலே அவர்களை அரசியல் மேகங்கள் சூழ்வது தவிர்க்க முடியாத ஒன்று. அதை அவர்கள் விரும்பினாலும், விரும்பாமல் போனாலும் கடந்து சென்றாக வேண்டும். அதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மட்டும் விதிவிலக்கல்ல. அவரது சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு வாழ்க்கை இறுதி நாட்களை நெருங்கிய தருணத்திலும், ஓய்வுக்கு பிறகாகவும் தோனியின் அரசியல் என்ட்ரி குறித்த பேச்சுகள் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன. 

image

பொது வாழ்க்கையில் ஈடுபடுவாரா தோனி?

தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததும் அவரது அரசியல் இன்னிங்ஸுக்கான ஆஃப்பர்கள் வர ஆரம்பமாகி அது தொடர்ந்து கொண்டும் இருக்கிறது. வெளிப்படையாகவே சில தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் தோனி அரசியலுக்கு வர வேண்டும் என சொல்லி இருந்தனர். 

“தோனி சர்வதேச கிரிக்கெட்டுக்கு மட்டும்தான் விடை கொடுத்துள்ளார். அவரது தலைமை பண்புக்கு அல்ல. அணியை வழிநடத்தும் மிகச்சிறந்த தலைமை பண்பு கொண்ட அவர் அதனை பொது வாழ்க்கையிலும் பயன்படுத்த வேண்டும்” என வெளிப்படையாகவே ஒருவர் தெரிவித்திருந்தார். ஜார்க்கண்ட் மாநில அரசியல் பிரபலமாக தோனியை மாற்றும் முயற்சிகளும் நடந்தன. நடந்து கொண்டிருக்கின்றன. 

அரசியலில் அண்ணன் நரேந்திர சிங் தோனி!

தோனியின் உடன் பிறந்த சகோதரர் நரேந்திர சிங் தோனி கடந்த 2009இல் பாஜகவில் இணைந்தார். சில ஆண்டுகளில் தனது கொள்கை முடிவுகளை மாற்றிக் கொண்ட அவர் 2013 ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சியிலும் இணைந்தார். அவர் குறித்த தகவல்கள் எதுவும் தோனியின் பயோபிக் படத்தில் பகிரப்படவில்லை. அதற்கு காரணம் அவரது அரசியல் முகம் என சொல்லப்படுகிறது. 

image

ஓய்வுக்கு பிறகு பொது வாழ்க்கையில் கிரிக்கெட் வீரர்கள்!

மனோஜ் திவாரி, கவுதம் கம்பீர், முகமது கைஃப், கீர்த்தி ஆசாத், முகமது அசாருதீன், நவ்ஜோத் சிங் சித்து மாதிரியான முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது ஓய்விற்கு பிறகு அரசியலில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலும் கிரிக்கெட் வீரர்கள் அங்கம் வகிப்பது தேசிய கட்சிகளாகதான் உள்ளன. பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான் கான் கூட அந்த நாட்டு கிரிக்கெட் அணியை வழிநடத்தி, 1992இல் உலக கோப்பை வெல்லச் செய்துள்ளார். அதனால்தான் நாட்டில் மிகவும் பிரபலமான தோனியை அரசியல் மேகங்கள் சூழ்ந்து கொண்டிருக்கின்றன. 

ஓய்வுக்கு பிறகு தோனி?

சர்வதேச கிரிக்கெட்டில் தோனி ஓய்வை அறிவித்ததும் அவரது அரசியல் வருகைக்காக பல கட்சிகள் வழிமேல் விழி வைத்து காத்திருக்கின்றன. ஆனால் தோனியோ அதை எதையும் கண்டும் காணாமல் விவசாயம் செய்வது, கால்நடை வளர்ப்பு, தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளது மாதிரியான பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அது தவிர ஐபிஎல் கிரிக்கெட் விளையாடுவதிலும் தோனி ஆர்வம் செலுத்தி வருகிறார். 

image

இனி வரும் நாட்களில் அவர் அரசியல் குறித்து என்ன முடிவு எடுப்பார் என்பது சஸ்பென்ஸாக உள்ளது.  

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்