டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக முதல் பதக்கம் வென்று கொடுத்தவர் மீராபாய் சானு. இந்நிலையில் இந்தப் பதக்கம் நிச்சயம் பெண் பிள்ளைகளை பளுதூக்குதல் விளையாட்டின் பக்கமாக ஈர்க்கும் என அவர் தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் வெள்ளி பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
“பதக்கம் வெல்ல வேண்டுமென்ற எனது கனவு நினைவாகியுள்ளது. ரியோ ஒலிம்பிக்கில் நான் பெற்ற தோல்வி எனக்கு நிறைய பாடங்களை சொல்லிக் கொடுத்தது. அணுகுமுறையை மாற்றினேன். கடுமையாக உழைத்தேன்.
பளுதூக்குதலில் பெண் பிள்ளைகள் அதிகம் பங்கேற்பது இல்லை. ஆனால் இந்த நிலை நிச்சயம் மாறும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கு காரணம் நான் வென்றுள்ள பதக்கம். வரும் நாட்களில் அதிகளவில் பெண் பிள்ளைகள் இந்த விளையாட்டை விருப்பமுடன் விளையாடுவார்கள் என்று கருதுகிறேன்.
பெண்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். அதனால் பெற்றவர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை ஏதேனும் ஒரு விளையாட்டை தேர்வு செய்து விளையாட ஊக்கமளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். எனது கிராமமே மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளது” என மீராபாய் சானு தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்