Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பாஜகவின் எதிரணிக்கு யார் தலைவரானாலும் சம்மதமே - மம்தா பானர்ஜி

பாஜகவுக்கு எதிராக உருவாகும் கூட்டணியின் தலைவர் யார் என்பது, சூழ்நிலையை பொறுத்து முடிவாகும் என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்கு வங்காள சட்டப்பேரவை தேர்தலில் தொடர்ந்து 2ஆவது முறையாக வெற்றி பெற்ற பின் மம்தா பானர்ஜி 5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். தேசிய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இப்பயணத்தின் தொடக்கமாக பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக மம்தா சந்தித்தார்.

பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். இதையடுத்து, பாஜகவுக்கு எதிரான அணிக்கு தலைமை வகிக்கப்போவது யார் என செய்தியாளர்கள் மம்தாவிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மம்தா, தான் ஜோசியம் அறிந்தவர் அல்ல என்றும் எனினும் பாஜகவுக்கு எதிராக உருவாகும் அணிக்கு யார் தலைவர் என்பது சூழலை பொறுத்து முடிவாகும் என்றார்.

image

பாஜகவுக்கு எதிரான கூட்டணிக்கு யார் தலைவராக வந்தாலும் அது தனக்கு சம்மதம்தான் என்றும் மம்தா கூறினார். பாரதிய ஜனதா என்ற பூனைக்கு மணி கட்டுவதுதான் தனக்கு முக்கியம் என்றும் அவர் கூறினார்.

கடந்த மேற்கு வங்காள தேர்தலை "ஆட்டம் தொடங்கிவிட்டது" என்ற முழக்கத்துடன் தங்கள் கட்சி எதிர்கொண்டதாகவும் வரும் மக்களவை தேர்தலில் அக்கோஷம் நாடெங்கும் எதிரொலிக்கும் என்றும் மம்தா குறிப்பிட்டார்.

பாஜக எண்ணிக்கை அளவில் பெரிதாக இருந்தாலும் எதிர்க்கட்சிகள் அரசியல் ரீதியாக வலிமையாக இருப்பதாகவும் அவை இணைந்தால் வரலாறு நிச்சயம் உருவாகும் என்றும் மம்தா தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று சோனியா காந்தியும் விரும்புவதாக மேற்கு வங்க முதல்வர் கூறினார். 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் மோடிக்கும் நாட்டுக்கும் இடையில் நடைபெறுவதாக இருக்கும் என்றும் மம்தா தெரிவித்தார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்