தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தெலங்கானாவைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது மாலோத் கவிதா என்பவர், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் சார்பாக தெலங்கானா மாநிலம் மஹ்பூபாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனினும், தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தே அவர் வெற்றி பெற்றார் என புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, மாலோத் கவிதா மற்றும் அவரது உதவியாளர் சாஹீத் அலி மீது புர்கம்பஹாத் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. வழக்கு விசாரணையின்போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை உதவியாளர் சாஹீத் அலி ஒப்புக்கொண்டார். வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்தது உண்மை என நிரூபணமானதை தொடர்ந்து, மாலோத் கவிதா மற்றும் அவரது உதவியாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக மனுத்தாக்கல் செய்த நிலையில், மாலோத் கவிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்