வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நாடாளுமன்ற முற்றுகை போரட்டத்தை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் முதல் போராட்டங்கள் நடந்து வருகிறது. பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு வருகின்றனர். இந்த விவசாயிகளுடன் மத்திய அரசு பத்துக்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதையொட்டி மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக நாடாளுமன்றத்துக்கு வெளியே தினந்தோறும் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர். ஆனால் கொரோனாவை காரணம் காட்டி விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு டெல்லி போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து தடையை மீறி நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தை நடத்துவது என விவசாய சங்கங்கள் முடிவு செய்தன. இந்த நிலையில் நாடாளுமன்ற முற்றுகை போரட்டத்தை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். விவசாயிகளின் இந்த போராட்டத்தையொட்டி டெல்லியின் முக்கிய எல்லைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்