இந்தியாவின் பிரபல பங்குச்சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன் ஜுன்வாலா, விமானப் போக்குவரத்து நிறுவனத்தில் முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தப் புதிய விமானப் போக்குவரத்து நிறுவனத்தில் சுமார் 260 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருக்கிறார் அவர். இதன்மூலம் புதிய நிறுவனத்தில் 40 சதவீத பங்குகள் இவருக்கு இருக்கும். இந்த நிறுவனத்துக்கு 'ஆகாசா' என பெயரிடப்பட்டிருப்பதாக 'தி எகானாமிக் டைம்ஸ்' செய்தி வெளியிட்டிருக்கிறது.
விமானப் போக்குவரத்துத் துறையில் உள்ள பிரபல புரஃபஷனல்கள் இந்த நிறுவனத்தில் இணைய இருக்கிறார்கள். 'ஜெட் ஏர்வேஸ்' நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி வினய் துபே இந்த நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இணைய இருப்பதாகவும் தெரிகிறது. தவிர 'கோ ஏர்', 'ஸ்பைஸ்ஜெட்' உள்ளிட்ட நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் இந்த நிறுவனத்தில் இணைய இருக்கிறார்கள். பல கட்ட அனுமதிகள் வாங்க வேண்டி இருப்ப்பதால் அடுத்த ஆண்டு மத்தியில் இந்த விமானப் போக்குவரத்து நிறுவனம் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.
விமான சேவைத் துறையில் ஏற்கெனவே கணிசமான தொகையை ராகேஷ் முதலீடு செய்திருந்தார். 'ஸ்பைஸ்ஜெட்' நிறுவனத்தில் ஒரு சதவீத பங்குகளை வைத்திருந்தார். அதேபோல 'ஜெட் ஏர்வேஸ்' நிறுவனத்திலும் ஒரு சதவீதம் அளவுக்கு பங்குகளை வைத்திருந்தார். ஆனால் 2019-ம் ஆண்டு 'ஜெட் ஏர்வேஸ்' மூடப்பட்டது.
கோவிட் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் துறைகளில் விமானப் போக்குவரத்து துறையும் ஒன்று. பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள், விமான எரிபொருள் விலை உயர்ந்திருப்பது உள்ளிட்ட காரணங்களால் இந்த துறை கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதனால் பலரும் வேலை இழந்துள்ளனர். மூன்றாம் அலை வரும் என கணிக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழலில் புதிய விமான நிறுவனம் தொடங்கும் திட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்