Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

”விஜய் ரீல் ஹீரோவா, ரியல் ஹீரோவா என்பது நீதிபதிக்கு தேவையில்லாதது”: மேனாள் நீதிபதி சந்துரு

”நடிகர்கள் ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. சமூக நீதிக்குப் பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள், வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள இயலாது” என்று இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்த தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு சுங்கவரி செலுத்திய நிலையில், நுழைவு வரி வசூலிக்கத் தடைக் கோரியிருந்த நடிகர் விஜய்யின் மனு மீதான விசாரணையின் போது நீதிபதி எம்.எஸ் சுப்ரமணியம் கூறிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

நீதிபதியின் இந்தக் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ள சூழலில் ”இந்திய குடிமக்கள் யாராக இருந்தாலும் வரி குறைப்பு கேட்டு முறையிடுவது அவர்களது உரிமை. அவர்களை நடிகர் என்று பார்ப்பது தவறு” என்று விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார் கார்த்தி சிதம்பரம். முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்பும் விஜய்க்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற மேனாள் நீதிபதி கே.சந்துருவிடம் இதுகுறித்து பேசினோம்,

நுழைவு வரி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

“ஆரம்பத்தில் பாண்டிச்சேரியில் இருந்து வாங்கும் வாகனங்களுக்காகத்தான் நுழைவு வரிச் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அங்கு, 4 சதவீத குறைந்த விற்பனை வரியும், தமிழகத்தில் 13 சதவீதமும் விற்பனை வரி இருக்கிறது. அந்த 9 சதவீத வரியை மிச்சப்படுத்த பாண்டிச்சேரியில் போய் வாகனங்களை வாங்குகிறார்கள். நானும் முதன்முதலாக வழக்கறிஞர் ஆனபோது 1977 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில்தான் 5022 ரூபாய்க்கு ஒரு ஸ்கூட்டர் வாங்கினேன். எனக்கு, 500 ரூபாய் மிச்சம் ஆனது. பணம் மிச்சப்படுவதால் பாண்டிச்சேரியில் வாங்கலாமே என்று மக்கள் வாங்குகிறார்கள். அந்தமாதிரி, பாண்டிச்சேரியிலேயே அதிகளவில் வாகனங்கள் வங்குவது தமிழகத்திற்கு வரி நஷ்டம் எற்படுகிறது என்று ’நுழைவு வரி சட்டம்’ கொண்டு வந்தார்கள்.

இந்திய அரசியல் சட்டத்தின் 304 வது பிரிவு ‘இந்தியா முழுக்க யார், எங்கு வேண்டுமென்றாலும் செல்லலாம். அதற்கு, எந்தத்தடையும் இருக்கக்கூடாது’ என்கிறது. ஆனால், இந்தமாதிரி வாகனங்களுக்கு நுழைவு வரி போடும்போது, அந்த சட்டம் செல்லுமா? செல்லாதா? என்ற பிரச்சனை எழுந்தது. 4 சதவீத வரிக்கும் 13 சதவீத வரிக்கும் உள்ள வித்தியாசம் கிட்டத்தட்ட 9 சதவீதம் வருகிறது. அதனால்,அதில் தவறில்லை. வரியை ஏய்க்க வாகனங்களை வாங்கி வருபவர்களிடம் வரி வாங்கலாம் என்றார்கள்.

ஆனால், நடிகர் விஜய் பாண்டிச்சேரியில் கார் வாங்கவில்லை. இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்து சுங்கவரிக் கட்டி ஹார்பரிலிருந்து காரை எடுத்துக்கொண்டு வந்துவிட்டார். ஆனால், பதிவு செய்யச்செல்லும்போது கூடுதலாக நுழைவு வரி கேட்கிறார்கள். ’கப்பல் வழியாக வரும் வண்டிகளுக்கு நுழைவு வரி உண்டா? ஏற்கனவே, நான் சுங்கவரி கட்டியதால் என்னால் நுழைவு வரி செலுத்தமுடியாது’ என்று கேட்கிறார். அது அவரது உரிமை. பக்கத்து மாநிலத்தில் இருந்து குறைந்த விற்பனை வரியை ஏமாற்றக்கூடாது என்பதால் ஏமாற்றுவதற்கு போடும் வித்தியாசம்தான் நுழைவு வரி. ஆனால், விஜய் வெளிநாட்டில் இருந்து காரை இறக்குமதி செய்துள்ளார். அவர் யாரையும் ஏமாற்றவில்லையே? அவருக்கு வாதிட உரிமை இருக்கிறது. அவரின், வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், தள்ளுபடி செய்யப்போகிறீர்கள். அவர், கட்டப்போகிறார். ஆனால், இந்தமாதிரி ஸ்டேட்மெண்ட் எல்லாம் அநாவசியம். விஜய் என்று சொல்லவில்லை. எந்த நடிகராக இருந்தாலும் மற்றவர்கள் சொல்லிக்கொடுத்து ஸ்கிரிப்ட்டை படிப்பார்களே தவிர, அவர்களுக்கே சுயமாக யோசிக்க எங்கு நேரம் இருக்கிறது?. பணம் மிச்சப்படுகிறது என்று வழக்கறிஞர் ’கேஸ் போடலாமா?’ என்று கேட்டால் ’போடுங்கள்’ என்றுதான் சொல்வார்கள். போடவேண்டாம் என்றா சொல்லப்போகிறார்கள்?. அதனால், வரி ஏய்ப்பு செய்வதற்கும் வரியை திட்டமிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. திட்டமிடுவதைத்தான் பலரும் செய்கிறார்கள்.

மேலும், நுழைவுவரிச் சட்டம் கொண்டுவரும்போது, இரண்டு விதிவிலக்கு இருந்தது. இதெல்லாம் சட்டம் தெரிந்தவர்களுக்கே புரியாது. வழக்கறிஞராக இருந்தால்கூட எல்லோருக்கும் அனைத்தும் தெரிந்துவிடாது. வரி சட்டம் தெரியாத ஒரு வழக்கறிஞர் தெரிந்த வழக்கறிஞரிடம் கேட்பார்.
அந்த மாதிரிதான், விஜய் தரப்பும் இதுபோல் வரி விலக்கு கேட்டு வழக்கு தொடுக்கிறது. அதுவும், இந்த வழக்கு இப்போதுதான் வந்துள்ளது. இதனை ஆறு மாதத்திற்கு முன்புகூட முடித்திருக்கலாமே? வழக்கு விசாரணைக்கு வராததற்கு விஜய் காரணமல்ல. நீதிமன்றத்தில் நீதிபதிகள் இல்லை. அவர்களுக்கு விசாரிக்க நேரமில்லை என்பதால் வருகிறது”.

image

’ரீல் ஹீரோவாக இருக்கக்கூடாது’ என்ற நீதிபதியின் கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

“நான் நீதிபதியாக இருந்திருந்தால் இந்தமாதிரி தீர்ப்பை கொடுத்திருக்கமாட்டேன். எவ்ளோ பெரிய ஆட்களாக இருந்தாலும் பிரச்சனை சார்ந்த வல்லுநர்களிடம்தான் செல்வார்கள். அதுமாதிரி, வரியில் இருந்து விதிவிலக்கு கேட்பது இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் உரிமை. இந்தியாவில் பெரிய பெரிய பணக்காரர்கள் பலர் வரிவிலக்கு கேட்டிருக்கிறார்கள். கேட்டுக் கிடைத்தால் சந்தோஷப்படப்போகிறார்கள். இல்லையென்றால் கட்டப்போகிறார்கள். ஆனால், ரீல் ஹீரோ என்று உள்நோக்கம் கற்பிக்க என்ன நோக்கம் இருக்கிறது? ரீல் ஹீரோவா இல்லை ரியல் ஹீரோவா என்பதெல்லாம் தேவையில்லாத விஷயம். என்னைப் பொறுத்தவரைக்கும் எவ்வளவு படித்தவர்களாக இருந்தாலும் ஒரு கருவியாகத்தான் செயல்படுகிறார்கள். வழக்கறிஞரிடம் செல்லும்போது அவர்கள் சொல்லும் இடத்தில் கையெழுத்துப் போட்டுவிடுவார்கள். அதுபோல்தான், இதுவும். அதற்கு விஜய்யை ஏன் குறை சொல்லவேண்டும். அவருக்கு ஆலோசனை சொன்னவர்களை குறை சொல்லலாம். அர்த்தம் இருக்கிறது. தவறாக அட்வைஸ் கொடுத்து வழக்கு தொடுத்தால், அதற்கு அட்வைஸ் கொடுத்து அபராதம் விதிக்கப்போகிறார்கள். அதற்கு, கேஸ் போட்டவர்களை ஏன் குறை சொல்லவேண்டும்? அவர், வரி ஏய்ப்பு செய்பவர் என்று எப்படி சொல்ல முடியும்? விதிவிலக்கு இல்லை என்று சொன்னால் கட்டப்போகிறார். அப்படி கட்டவில்லை என்றால், அதற்கு அபராதம் இருக்கு. வட்டியும் இருக்கு. எல்லா வரி சட்டத்திலும் தாமதமாகக் கட்டினால் வட்டி கட்டவேண்டும். இதனால், அரசிற்கு எந்த நஷ்டமும் வரவில்லையே?”.

’சமூக நீதிக்குப் பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள், இதுபோன்ற வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள இயலாது’ என்று கூறியிருப்பது குறித்து?

”இதில், எங்கு சமூக நீதி வந்தது? வரி சட்டங்களைப் பொறுத்தவரை நீதிபதிகள் கண்டிப்பாக இருப்பது சரியானதுதான். ஆனால், அது வரி வசூலுக்கு மட்டும்தான் இருக்கவேண்டும். அதற்கு, ஏன் விஜய்யயை விமர்சிக்கவேண்டும்? விஜய் சினிமாவில் பெரிய ஆளாக இருக்கலாம். ஆனால், ஒரு டிகிரி படித்தவர். ஒரு டிகிரி படித்த ஸ்டூடண்டுக்கு இந்த உலகத்தைப் பற்றி என்னத் தெரியும்? மெனேஜர் எழுதிக்கொடுக்கும் ஸ்டேட்மெண்டுக்கு அவர் கையெழுத்துப் போடப்போகிறார். எல்லாருக்கும் எல்லா வரிச்சட்டமும் தெரியவேண்டும் என்று அவசியம் கிடையாது. இதனை விஜய் தரப்பில் இரண்டு நீதிபதிகளிடம் அப்பீல் போட்டால் இந்தக் கருத்தை எல்லாம் ரத்து செய்துவிடுவார்கள். ஒருவரின் கேரக்டரையே டேமேஜ் செய்தால் அப்பீல் போடலாம்”.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்