கெளதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் சிம்பு நடிக்கும் ‘சிம்பு 47’ படத்தின் புதிய தலைப்பை அறிவித்திருக்கிறது படக்குழு.
கடந்த 2010 ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ வெற்றிக்குப்பிறகு சிம்பு, கௌதம் மேனன் கூட்டணி ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் மீண்டும் இணைந்தது. அந்தப் படத்திற்கு பிறகு கௌதம் மேனன் - சிம்பு கூட்டணி புதிய படத்தில் இணைய உள்ளதாகவும் நதிகளிலே நீராடும் சூரியன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டு இருந்தார். இந்தப் படத்திலும் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
இதனிடையே, ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ தலைப்பு மாற்றப்பட்டிருப்பதாகவும் புதிய தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று 1.15 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு நேற்றிரவு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தற்போது ஃபர்ஸ்ட் லுக் ஃபோஸ்டரையும் தலைப்பையும் படக்குழு வெளியிட்டிருக்கிறது. ’வெந்து தணிந்தது காடு’ என்று படத்திற்கு தலைப்பிட்டுள்ளார்கள். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரின் பின்னணியில் எரிந்துகொண்டிருக்கும் காட்டுத்தீ... அதைவிட அணைக்க முடியாத நெருப்பாய் இருக்கிறது லுங்கி சட்டையுடன் காட்சியளிக்கும் சிம்பு முகத்தில் தெரியும் கோபம். 15 அல்லது 17 வயது இளைஞராய் கையில் கம்பு வைத்துக்கொண்டு மிரட்டல் பார்வையுடன் நிற்கும் சிம்புவின் தோற்றம் கவனம் ஈர்க்கிறது. இதுவரை வெளியான சிம்பு படங்களில் ’வெந்து தணிந்தது காடு’ சிம்புவின் வித்தியாசமான படம் எனபதை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உணர்த்துகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்