கோடநாடு பங்களாவில் அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்ய தொடங்கியுள்ள தனிப்படையினர், பல்வேறு கேள்விகளுக்கு விடை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணை நடத்தி வரும் தனிப்படையினர், பங்களாவின் 8, 9 மற்றும் 10ஆம் எண் நுழைவு வாயில் பகுதிகளில் ஆய்வு செய்தனர். 2017ஆம் ஆண்டு பங்களாவில் வேலை பார்த்து வந்த காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்ட இடத்தில் ஆய்வு செய்த தனிப்படையினர், அவர் எவ்வாறு இறந்து கிடந்தார்? அவரது கை, கால்கள் கட்டப்பட்டு இருந்ததா? உடலில் வேறு காயங்கள் இருந்தனவா? என்பது குறித்து விசாரித்தனர். காயங்களுடன் மயக்க நிலையில் கிடந்த மற்றொரு காவலாளி கிருஷ்ணதபா, மயக்கத்தில் என்ன பேசினார்? என்பது குறித்தும் பங்களா பணியாளர்களிடமும், எஸ்டேட் மேலாளர் நடராஜிடமும் கேட்டு அதனை பதிவு செய்துகொண்டனர்.
பின்னர் பங்களாவின் ஜன்னல்கள் உடைக்கப்பட்ட இடத்திலும் தனிப்படைக் காவலர்கள் ஆய்வு செய்தனர். சம்பவம் நடந்த சமயத்தில் பணியாளர்கள் அளித்த வாக்குமூலத்தையும், தற்போது அவர்கள் அளித்துள்ள தகவல்களையும் ஒப்பிட்டு எதாவது முரண்பாடுகள் உள்ளதா என்பது குறித்து தனிப்படையினர் ஆய்வு செய்ய உள்ளனர். காயமடைந்த மற்றொரு காவலாளி கிருஷ்ணதபா சொந்த ஊரான நேபாளத்திற்கே சென்றுவிட்ட நிலையில், அவரையும் அழைத்து வந்து விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கூடுதல் விசாரணைக்கு தடை கோரி சாட்சி ரவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நாளை மறுதினம் (செப்.7) விசாரிக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்