நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் கைது செய்யப்பட்டுள்ள 8 பேரில் இருவர் குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளன.
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் மும்பை சொகுசு கப்பலில் நடந்த விருந்தில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய காரணத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். பாலிவுட்டும் போதைப்பொருளும் பிரிக்க முடியாத ஒன்றாக இருந்துவருகிறது. இதனால் போதைப்பொருள் ரெய்டு அடிக்கடி நடப்பதும் வாடிக்கைதான். என்றாலும் ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட விவகாரம், பெரிய சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆர்யன் கான் ஞாயிற்றுக்கிழமை ரேவ் பார்ட்டியில் கலந்துகொள்ள சென்றபோதுதான் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். ரேவ் பார்ட்டி என்பது போதை பொருளை பயன்படுத்தி இரவு முழுக்க நடனம் ஆடும் பார்ட்டி ஆகும். இந்தப் பார்ட்டியின்போது நடனம் ஆடும் பெண்களுக்கு பணம் கொடுப்பது வழக்கம். அதிக அளவில் போதைப்பொருள், பணம் புழங்கும் பார்ட்டி பாலிவுட் வட்டாரங்களில் சகஜமான ஒன்றாக நடந்து வருவதாகவும், அந்த பார்ட்டிகள் பெரும்பாலும் தனியார் இடங்களில் சட்டவிரோதமாக நடந்துவதாகவும் கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை இதுபோன்ற பார்ட்டி மும்பை சொகுசு கப்பலில் நடந்து வருவதாக தகவல் கிடைக்க உல்லாசக் கப்பலில் பயணிகளுடன் பயணிகளாக போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் சென்று போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இந்த அதிரடி நடவடிக்கைகளில் ஆர்யன் கானைச் சேர்த்து கைது செய்யப்பட்டவர்கள் மொத்தம் 8 பேர். அதில் ஒரு பெண்தான் முன்முன் தமேச்சா. இவர் ஒரு ஃபேஷன் மாடல். மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட பிசினஸ் பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவர் முன்முன் தமேச்சா.
சாகர் மாவட்டத்திலேயே படிப்புகளை முடித்த அவர் ஆறு வருடங்கள் முன்பே அங்கிருந்து இடம்பெயர்ந்துவிட்டார். சில வருடங்கள் தனது சகோதரன் உடன் டெல்லியில் வசித்தவர், அதன்பின் மும்பைக்கு இடம்பெயர்ந்தார் என்று சொல்லப்படுகிறது. முன்முன் தமேச்சாவின் தந்தை பல வருடங்கள் முன்பே இறந்துவிட, அவரின் தாயும் சென்ற ஆண்டு இறந்துவிட தற்போது சாகர் மாவட்டத்தில் அவரின் குடும்பத்தைச் சேர்ந்த யாரும் வசிக்கவில்லை.
தற்போது 39 வயதாகும் முன்முன் தமேச்சா, 2019-இல் வடக்கு டெல்லி வளாகத்தில் உள்ள சர்வதேச ஃபேஷன் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் (ஐஐஎஃப்டி) மையத்தில் நடந்த பேஷன் நிகழ்ச்சி உள்ளிட்டவற்றில் கலந்துகொண்டுள்ளார். பாலிவுட் சினிமாவில் வாய்ப்பை எதிர்நோக்கி இருக்கும் முன்முன், அடிக்கடி பார்ட்டிகளில் கலந்துகொள்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளார். அப்படிதான் இந்த பார்ட்டியில் கலந்துகொள்ளும்போது போதைப்பொருள் வைத்திருக்க தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரைக் கைது செய்யும்போது, அவரிடம் இருந்து 5 கிராம் மதிப்புள்ள சரஸ் என்ற போதைப்பொருளையும் கைப்பற்றியுள்ளனர். சரஸ் என்பது கஞ்சா செடியின் பிசினிலிருந்து தயாரிக்கப்படும் போதைப்பொருள் ஆகும். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் போதைப்பொருளை வாங்கியதாக தகவல் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அர்பாஸ் சேத் மெர்ச்சன்ட்: கைது செய்யப்பட்ட 8 பேரில் மற்றொரு முக்கியமான நபர் அர்பாஸ் சேத் மெர்ச்சன்ட். இவர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் மற்றும் மகள் சுஹானா கானின் நெருங்கிய நண்பர் எனக் கூறப்படுகிறது. பாலிவுட்டில் துணை நடிகராக சில படங்களில் நடித்துள்ள அர்பாஸ் சேத் மெர்ச்சன்ட், ஆர்யன் கான் போன்று பூஜா பேடியின் மகள் அலயா, நடிகர் இர்பான் கானின் மகன் பாபில் கான் என நட்சத்திர தம்பதிகளின் பிள்ளைகள் பலரிடம் நட்பாக இருந்துள்ளார். அவர்கள் பலருடன் பார்ட்டிகளில் கலந்துகொண்டு எடுத்த புகைப்படங்கள் இணையங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.
இவர் பார்ட்டியின்போது 6 கிராம் மதிப்புள்ள போதைப்பொருள் வைத்திருந்ததாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கூறியுள்ளனர். இதனிடையே, கைது செய்யப்பட்ட 8 பேருக்கும் வரும் 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.
- மலையரசு
| தொடர்புடைய செய்தி: “ஷாருக்கானுக்கு ஆதரவாக இருக்கிறோம்” - ட்விட்டரில் குவியும் ஆதரவு |
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்