சென்னை நந்தனத்தில் உள்ள அம்மா வளாகத்தில் உள்ள ஒரு கட்டடமான ஒருங்கிணைந்த நிதித்துறை கட்டடத்திற்குத்தான் பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
அம்மா வளாகத்தின் பெயரை மாற்றக்கூடாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை நந்தனத்தில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை, ஒருங்கிணைந்த நிதித்துறை மற்றும் மீன்வளத்துறை போன்ற பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களின் கட்டடங்கள் அமைந்துள்ள அம்மா வளாகதத்தில் உள்ள ஒரு கட்டடமான ஒருங்கிணைந்த நிதித்துறை கட்டடத்திற்குத்தான் பேராசிரியர் க. அன்பழகன் மாளிகை என பெயரிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியின்போது பெயரிடப்பட்ட அம்மா வளாகம் என்ற பெயரையோ, அதற்குரிய அரசாணையையோ மாற்றவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். பொறுப்புள்ள பதவி வகிக்கும் எதிர்க்கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் துணைத்தலைவரும் உண்மை என்ன என்பதை அறிந்து கொண்டு அறிக்கை விட வேண்டும் என்றும் தங்கம் தென்னரசு தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்