கவர்ச்சியான வாக்குறுதிகள் மூலம் வாக்குகளை பெற்றபின் திராவிட முன்னேற்ற கழகம் மக்களை மறந்துவிடுவதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் பொதுமக்களின் பிரச்னைகள் தீரும்வரை குரல் கொடுப்போம், குறைகளை எடுத்துரைப்போம் என்று தாரமங்கலத்தில் பிரச்சாரத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்காவில் உள்ள தாரமங்கலம் நகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது நீட் தேர்வு குறித்து முதல்வர் விடுத்த சவாலை ஏற்றுக் கொண்டேன். ஆனால் இதுவரை அதற்கு முதல்வரிடம் இருந்து பதில் இல்லை என்றார். சட்டமன்றத்தில் பொதுமக்களின் குறைகளை பேசினால், போதும் என்று கூறி திமுக அமைச்சர்கள் நாங்கள் பேசுவதை தடுக்கிறார்கள். ஆனால், பொதுமக்களின் பிரச்சனைகள் தீரும்வரை குரல் கொடுப்போம், குறைகளை எடுத்துரைப்போம். சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்போம் என்றார்.
தொடர்ந்து ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளை திமுகவினர் மிரட்டுகின்றனர். திமுக தொடர்ந்து ஜனநாயக படுகொலை செய்து வருகிறது. அரசியல் ரீதியாக தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சியில் மக்கள் சுதந்திரமாக இருந்தனர் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார். கடந்த அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், மக்களுக்கான எதையும் செய்யாமல், திமுகவில் தொண்டர்கள் முதல் தலைவர் வரை பொய்யே மூலதனமாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். மக்களை ஏமாற்றுவதில் முதன்மையான கட்சியாக திமுக உள்ளது என்று அவர் பேசினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்