ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி சூதாட்ட விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி விளையாட்டுகளால் பணத்தை இழந்தவர்கள், உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில், அத்தகையை விளையாட்டுக்களை தடை செய்ய பல்வேறு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ஆன்லைன் விளையாட்டுகளின் தாக்கம் குறித்து கண்டறிய தமிழக அரசு, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. அந்த குழுவின் ஆய்வு அறிக்கை ஒரு மாதத்திற்கு முன் அரசிடம் அளிக்கப்பட்டது. மேலும் இணையவழி சூதாட்டத்திற்கு தடை விதிப்பது குறித்தும், ஒழுங்குபடுத்துவது தொடர்பாகவும் பொதுமக்களிடமும் தமிழக அரசு கருத்து கேட்டிருந்தது.
பொதுமக்கள், பெற்றோர், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களைச் சேர்ந்தோர் தங்கள் கருத்துகளை பகிரலாம் என தெரிவிக்கப்ப்டடிருந்தது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அதில் ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி சூதாட்ட விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டுவருவது பற்றி முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்