Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கடைசி ஓவரில் பாகிஸ்தான் த்ரில் வெற்றி - இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்?

நடப்பு ஆசியக் கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது.

ஆசியக் கோப்பை டி20 தொடரின் 'சூப்பர் 4' சுற்றில் நேற்றிரவு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் களமிறங்கினர்.

ரோகித் சர்மா 28 ரன்னிலும், கேஎல் ராகுல் 28 ரன்னிலும் வெளியேறினர். அடுத்துவந்த விராட் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 44 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். தினேஷ் கார்த்திற்கு பதிலாக சேர்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

image

இதற்கு முன் பாகிஸ்தான் உடனான ஆட்டத்தில் கடைசி ஓவரில் சிக்சர் அடித்து வெற்றிக்கு உதவிய ஹர்திக் பாண்டியா இந்தப் போட்டியில் சந்தித்த இரண்டாவது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் அணியின் ஷதாப் கான் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைத்தொடர்ந்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் களமிறங்கினர். பாபர் அசாம் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த பகர் சமான் 15 ரன்னில் வெளியேறினார். ஆனால், அடுத்துவந்த முகமது நவாசுடன் ஜோடி சேர்ந்த ரிஸ்வான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நவாஸ் 20 பந்துகளில் 42 ரன்கள் குவித்து வெளியேறினார். முகமது ரிஸ்வான் 51 பந்துகளில் 71 ரன்கள் குவித்து வெளியேறினார்.

பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 182 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் லீக் சுற்றில் இந்தியாவிடம் அடைந்த தோல்விக்கு தற்போது பாகிஸ்தான் அணி பழி தீர்த்துக்கொண்டது.

image

இந்தப் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பந்துவீச்சும், ஃபீல்டிங் சொதப்பல்களும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஹர்திக் பாண்டியா, சாஹல், புவனேஸ்வர் குமார் ஆகியோர் 40 ரன்களுக்கு மேல் பந்துவீச்சில் விட்டு கொடுத்தனர். பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி 3 ஓவரில் 34 ரன்கள் பாகிஸ்தான் வெற்றிக்கு தேவைப்பட்டது. அப்போது, ரவி பிஸ்னாய் வீசிய ஓவரில் ஆசிப் அலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஆர்ஸ்தீப் சிங் தவறவிட்டார். இது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புவனேஸ்வர் குமார் வீசிய 19வது ஓவரில் பாகிஸ்தான் 19 ரன்களை விளாசியது.

ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இரவு 7:30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் இலங்கை அணியை துபாயில் வைத்து சந்திக்கிறது இந்திய அணி. இறுதிப்போட்டிக்கு முன்னேற இனி வரும் 2 ஆட்டங்களில் இந்திய அணி வெற்றியைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதையும் படிக்க: டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகும் ரவீந்திர ஜடேஜா? பிசிசிஐ கொடுத்த விளக்கம்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்