கொரோனா தடுப்பூசி செலுத்துவதை முடுக்கிவிடும் வகையில் நாடு முழுவதும் நேற்று தொடங்கிய தடுப்பூசி திருவிழாவில், ஒரே நாளில் 27 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வரும் 14 ஆம் தேதி வரை 'டிக்கா உத்சவ்' அதாவது 'தடுப்பூசி திருவிழா' என்ற பெயரில் 45 வயதுக்கு மேற்பட்ட அதிகபட்ச நபர்களுக்கு தடுப்பு மருந்து தரப்பட உள்ளது. இந்த 4 நாள்களில் உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் வழக்கத்தை விட இரட்டிப்பு எண்ணிக்கையில் தடுப்பூசி போடத் திட்டமிடப்பட்டுள்ளது. கர்நாடகா, டெல்லி போன்ற மாநிலங்களில் தடுப்பூசி திருவிழாவுக்காக கூடுதல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை, வரும் 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடத்தப்பட உள்ளது. மத்திய ஆட்சிப் பகுதியான புதுச்சேரியில் தடுப்பூசி திருவிழா தொடங்கிவிட்டது.
இதற்கிடையே பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோர் தங்கள் மாநிலங்களில் சில நாட்கள் வரையே தடுப்பூசிகள் இருப்பு உள்ளதாக மத்திய அரசிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தடுப்பூசி திருவிழாவில் நேற்று ஒரே நாளில் 27 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை 10 கோடியே 43 லட்சத்து 65 ஆயிரத்து 35 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்