சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 4 முதல் 7ம் தேதி வரையிலும், 12ம் வகுப்பு தேர்வுகள் மே 4 முதல் 15ம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டுமென எதிர்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “டெல்லியில் 6 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இந்த தேர்வு பணியில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். இது பெரிய அளவிலான கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும். தேர்வு எழுதப்போகும் மாணவ மாணவிகளின் வாழ்க்கையும், ஆரோக்கியமும் தான் எங்களுக்கு மிகவும் முக்கியம். இதனை கருத்தில்கொண்டு சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்யுமாறு மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு மத்திய அரசும், சிபிஎஸ்இ வாரியமும் தான் பொறுப்பேற்க வேண்டுமென அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்