ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஏற்கெனவே கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்ட நிலையிலும் தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா முதல் அலையை விட தற்போது தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள செய்தியில், ‘‘கொரோனா அறிகுறியுடன் மோகன் பகவத் நாக்பூரில் உள்ள கிங்ஸ்வே மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த மார்ச் 7-ம் தேதியன்று மோகன் பகவத் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்டார்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 70 வயதாகும் மோகன் பகவத்திற்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்