கூச்பெஹார் துப்பாக்கிச்சூடு தொடர்பாக மேற்குவங்க மக்கள் என்னை ராஜினாமா செய்யசொன்னால், நான் பதவி விலக தயார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருக்கிறார்.
கூச் பெஹார் வாக்குச்சாவடியில் சிஐஎஸ்எப் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை வைத்து வருகிறார்.
வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பசிர்ஹாட்டில் நடைபெற்ற பேரணியில் மம்தா பானர்ஜியின் கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “மேற்குவங்க மக்கள் எனது பதவியை ராஜினாமா செய்யச் சொன்னால், நான் பதவி விலக தயாராக உள்ளேன். நடந்து வரும் மாநில சட்டசபை தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் தோல்வியடையும் , முதலமைச்சர் மம்தா பானர்ஜி மே 2 ம் தேதி பதவி விலக வேண்டும்” எனத் தெரிவித்தார்
முன்னதாக மேற்குவங்க மாநிலம் கூச் பெஹார் மாவட்டத்தில் சிதல்குச்சி வாக்குச்சாவடியில் ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெற்ற நான்காவது கட்ட வாக்குப்பதிவின்போது சிஐஎஸ்எஃப் ஊழியர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு எட்டுக் கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது, இதுவரை நான்கு கட்ட தேர்தல் நிறைவடைந்திருக்கிறது, வரும் மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்