இறப்பை நோக்கி நகர்ந்துக்கொண்டிருந்த தன் தாய்க்கு, அவரின் இறுதி நிமிடங்களில் வீடியோ கால் வழியாக ஒரு பாடலை பாடி காண்போரை நெகிழ வைத்துள்ளார் மகன். இதை, அந்த அம்மாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா கொடுங்கதைகள் துயரத்தில் மூழ்கவைப்பதாக இருப்பதோடு, நெகிழவைப்பதாகவும் இருக்கின்றன. வேதனைக்கும், வலிக்கும் மத்தியில் இத்தகைய கதைகள் ஆறுதல் பெற உதவுமா எனத் தெரியவில்லை. ஆனால், கொரோனாவுக்கு எதிரான போரில் முன்களத்தில் இருக்கும் டாக்டர்கள் பகிர்ந்துகொள்ளும் கொரோனா அனுபவங்களில் சில, நம் காலத்தின் முக்கியப் பதிவாக அமைகின்றன. தீப்ஷிகா கோஷ் எனும் டாக்டர், ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ள அனுபவம் இத்தகைய பதிவாக அமைந்துள்ளது. நெஞ்சை கணக்கவைக்கும் இந்த பதிவு, மனிதநேயத்தின் ஈரத்தையும் கொண்டிருக்கிறது.
டாக்டர் தீபிகா கோஷ், மே 12-ம் தேதி பணி முடிந்த பிறகு ட்விட்டரில் பகிர்ந்துகொண்ட இந்தப் பதிவில், மொத்தம் மூன்று குறும்பதிவுகள்தான் உள்ளன. ஆனால், இவற்றை படித்து முடிக்கும்போது நம் நெஞ்சை உலுக்கிவிடுகின்றன.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவரின் நிலை குறித்து அவரது உறவினர்களுக்கு தெரிவிப்பதாக முதல் குறும்பதிவு அமைந்துள்ளது. அந்த நோயாளி உயிர் பிழைக்கமாட்டார் என்பதை தெரிவிக்கும் வகையிலான இந்தக் குறும்பதிவு இப்படி அமைகிறது:
"இன்று, எனது ஷிப்டின் முடிவில், உயிர் பிழைக்க வாய்ப்பில்லாத நோயாளி ஒருவரின் குடும்பத்தினருடன் வீடியோ அழைப்பில் பேசினேன். பொதுவாக, அவர்கள் விரும்பினால் எங்கள் மருத்துவமனையில் இவ்வாறு செய்வது வழக்கம். நோயாளியின் மகன் என்னிடம், என் நேரத்தை கொஞ்சம் கேட்டார். அதன் பிறகு அவர் இறந்து கொண்டிருக்கும் அம்மாவுக்காக ஒரு பாடலை பாடினார்."
இரண்டாவது குறும்பதிவு இப்படி அமைகிறது:
"அவர் 'தேரா முஜ்சே ஹை பெஹலா கா நாட்டா கோய்' எனும் பாடலை பாடினார். அவர் தன் அம்மாவை பார்த்தபடி பாடுவதை பார்த்துக்கொண்டே நான் போனை வைத்துக்கொண்டிருந்தேன். செவிலியர்கள் இடையே வந்து அமைதியாக நின்றுக்கொண்டிருந்தனர். அவர் இடையே உடைந்து அழுதாலும், பாடி முடித்தார். பின்னர் அம்மாவின் நிலையை கேட்டுவிட்டு, எனக்கு நன்றி கூறி போனை வைத்துவிட்டார்."
மூன்றாவது - இறுதி குறும்பதிவு இப்படி அமைகிறது:
"நானும் செவிலியர்களும் அப்படியே நின்று கொண்டிருந்தோம். நாங்கள் தலையை அசைத்துக்கொண்டோம், கண்கள் ஈரமாக இருந்தன. நர்ஸ்கள் ஒவ்வொருவராக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நோயாளிகளை கவனிக்க அல்லது அவர்கள் வெண்டிலேட்டர் சாதனத்தின் கூக்குரலுக்கு பதில் சொல்ல சென்றனர். இந்த பாடல் எங்களுக்கு மாறிவிட்டது. குறைந்தபட்சம் எனக்கேனும் மாறிவிட்டது. இனி இது அவர்களுடைய பாடலாக இருக்கும்."
பேச வார்த்தைகள் இல்லை என ரியா என்பவர் பதில் அளித்துள்ள இந்தக் குறும்பதிவுகளை படித்து முடிக்கும்போது, தனிமனிதர்கள் வாழ்வில் கொரோனா எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
கொரோனா நோயாளிகள் பலருக்கு குடும்பத்தினர் கடைசியாக விடை கொடுக்க கூட வழியில்லாத எண்ணற்ற கண்ணீர்க் கதைகளை மருத்துவர்கள் பதிவு செய்து வருகின்றனர். இத்தகைய கண்ணீர்க் கதைகளின் வரிசையில் இடம்பெறும் டாக்டர் தீப்ஷிகாவின் இந்த பகிர்வு, ஒரு நோயாளியின் கடைசி தருணத்தில் வீடியோ வழியே பாட்டுபாடி விடை கொடுத்த ஒரு பாசமிகு மகனுக்கு, அந்த வாய்ப்பை டாக்டர் உருவாக்கி தந்த நெகிழ்ச்சியான அனுபவத்தை விவரிக்கிறது.
அதேநேரத்தில் கொரோனா காலத்தின் கையறு நிலையையும் இந்தப் பதிவு உணர்த்துகிறது.
சொல்ல முடியாத சோகத்தையும், நெகிழச்சியையும் ஒருசேர உண்டாக்கும் இந்தப் பதிவுக்கு ட்விட்டர் பயனாளிகள் சிலர் பகிர்ந்து கொண்டுள்ள பதில் கருத்துகள் இந்த அனுபவத்தின் நீள - அகலங்களை உணர்த்துவதாக அமைகின்றன.
மீர் அகமது என்பவர், இந்த பெருந்தொற்று முடிந்த பிறகும் கூட, இதிலிருந்து எனது இதயம் முழுவதும் மீண்டு வருமா எனத் தெரியவில்லை என குறிப்பிட்டு அரசின செயலின்மை மீதான கோபத்தை பதிவு செய்துள்ளார்.
அர்னாப் என்பவர், 'இதை இரண்டு முறை படித்தேன். வலி மற்றும் உறையும் உணர்வுகளை படம் பிடித்துக்காட்டுகிறது. நல்ல பணி டாக்டர்' என்று பாராட்டியுள்ளார்.
'நான் எதுவுமே செய்யவில்லை, இது யாருக்கும் நிகழக்கூடாது' என டாக்டர் தீப்ஷிகா, இந்தப் பாராட்டுக்கு பதில் அளித்துள்ளார்.
"நீங்கள் மகத்தான பணி செய்கிறீர்கள், ஒருமுறை கூட, ஒன்றும் செய்யவில்லை என கூறாதீர்கள். நீங்கள் மகத்தானவர்கள், உங்களைப் போன்ற டாக்டர்களால்தான், மக்கள் தங்கள் அன்பானவர்களை திரும்ப பார்க்கும் வாய்ப்பை பெறுகின்றனர். உங்களைப்போன்ற முன்கள பணியாளர்கள் அனைவருக்கும் மேலும் சக்தி கிடைக்கட்டும்" என்று திவிஜேஷ் பரத்வாஜ் என்பவர் டாக்டர் தீப்ஷிகாவுக்கு பதில் அளித்துள்ளார்,
"கடைசி நேரத்தில் கூட, பிடித்தமான பாடல், பிடித்தமான குரலில் வந்ததையும் அம்மா உணர்ந்திருப்பார். அம்மாவுக்கும், மகனுக்கும் சில நிமிடங்களை அளித்தற்காக, மகன் விடைபெற வாய்ப்பு அளித்ததற்காக உங்களுக்கு ஆசிகள்" என ஜேமி கோஷ் என்பவர் பதில் அளித்துள்ளார்.
மருத்துவர்கள் அனுமதிக்காததால் தாத்தாவுடன் ஒருமுறை கூட பேச முடியவில்லை எனும் சோகத்தை ஒருவர் பகிர்ந்து கொண்டுள்ளார். எப்போது கேட்டாலும், பேசினால் அவருக்கு மூச்சுவிட முடியாது என டாக்டர்கள் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவுக்கு தனது வருத்தத்தை தெரிவித்துள்ள டாக்டர் தீப்ஷிகா, சில நோயாளிகள் ஒரு வார்த்தை பேசினால் கூட மூச்சுத் திணறும் நிலை இருப்பார்கள் என பதில் தெரிவித்து ஆறுதல் கூறியுள்ளார்.
இப்படி நீளும் இந்த விவாதத்தில் பதிவாகியுள்ள கருத்துகள், மனிதநேயத்தின் ஈர இழையுடன், நம் காலத்து துயரத்தின் பல்வேறு உணர்வுகளை பதிவு செய்கிறது.
Today, towards the end of my shift, I video called the relatives of a patient who is not going to make it. We usually do that in my hospital if it’s something they want. This patient’s son asked for a few minutes of my time. He then sang a song for his dying mother.
— Doctor (@DipshikhaGhosh) May 12, 2021
இந்தப் பதிவை வெளியிட்டுள்ள டாக்டர் தீப்ஷிகா, தன்னைப் பற்றி அறிமுக பக்கத்தில், தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர், பாதி பெங்காலி, பாதி தெலுங்கு என்றெல்லாம் குறிப்பிட்டு, ஒரு நூறு கோவிட் முட்டாள்களை எதிர்த்து போராடிக்கொண்டிருப்பவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை முறைப்படி கடைப்பிடிக்காதவர்களே இவ்வாறு கோவிட் முட்டாள்கள் என அழைக்கப்படுகின்றனர். தயவு செய்து இத்தகைய முட்டாள்களில் ஒருவராக இருக்காதீர்கள் என்பதுதான் டாக்டர் தீப்ஷிகா போன்றவர்கள் சொல்லாமல் சொல்லும் செய்தியாக இருக்கிறது.
- சைபர்சிம்மன்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்