வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் சேலம், தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், சேலம், தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை காலை எட்டரை மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 10 சென்டி மீட்டரும், சோளிங்கர், திருவாலங்காடு ஆகிய இடங்களில் தலா 8 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென் கிழக்கு இலங்கை கடலோர பகுதிகள், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று முதல் சூறாவளி வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்