கடந்த சில நாள்களாக, இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனா திரிபு, ஒரு சில மாநிலங்களில் பரவிவருகிறது. இந்நிலையில், இன்று இந்த வகை கொரோனாவால் பாதிப்பட்டு சிகிச்சை எடுத்துவந்த ஒருவர், மத்திய பிரதேசத்தில் இறந்திருக்கிறார். இவர்தான், டெல்டா பிளஸ் கொரோனாவால் இந்தியாவில் மரணமடைந்திருக்கும் முதல் நபரென்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை டெல்டா பிளஸ் கொரோனா, இந்தியாவில் 40 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில், 5 பேர் ம.பி.யை சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர்தான், இப்போது இறந்திருக்கிறார்.
இந்த இறப்பு பற்றி பேசியிருக்கும் அம்மாநில மருத்துவத்துறை அமைச்சர் விஷ்வால் சராங், “மாநிலத்தில் இதுவரை 5 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா திரிபு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் இறந்திருக்கிரார். இறந்த அந்நபர், ம.பி.யின் உஜ்ஜைன் என்ற மாவட்டத்தை சேர்ந்த பெண். மேற்கொண்டு இறப்பு ஏற்படாமல் இருக்க, அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மீதமுள்ள 4 பேர், கொரோனாவிலிருந்து குணமாகிவிட்டனர்” எனக்கூறியுள்ளார்.
குணமான 4 பேரும், கொரோனா தடுப்பூசியை ஏற்கெனவே எடுத்துக்கொண்டவர்கள் என்றும், இறந்திருக்கும் அந்த பெண் மட்டும் தடுப்பூசி எடுக்காமல் இருந்திருக்கிறார் என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இறந்த பெண்ணின் கணவர், இரு டோஸ் தடுப்பூசி எடுத்த நிலையிலும் இப்பெண் மட்டும் ஒரு டோஸ்கூட தடுப்பூசி எடுக்காமல் இருப்பது, தடுப்பூசி விநியோகத்தின் மீதிருக்கும் பாலின சமத்துவமின்மை மீது கூடுதல் கேள்விகளை எழுப்பிவருகிறது.
இந்த வகை கொரோனா திரிபை, நேற்று முன்தினம் (ஜூன் 22) ‘கவலை கொள்ளக்கூடிய கொரோனா திரிபு’ என்று ஒன்றிய அரசு வகைப்படுத்தியிருந்து குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்