தமிழகத்தில் நீட் தேர்வு தொடருமா, அதில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு தொடர்ந்து செயல்படுத்தப்படுமா என்பது உள்ளிட்ட பல்வேறு குழப்பங்களுக்கு உள்ளாகி உள்ளனர் மாணவர்கள்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அளித்த முக்கிய வாக்குறுதிகளில் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்பதும் ஒன்று. நீட் தேர்விலிருந்து முதல்வர் நிச்சயம் விலக்குப் பெற்றுத்தருவார் என மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறி வருகிறார். எனவே நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் சில மாணவர்கள். வேறு சில மாணவர்கள் நீட் தேர்வு எழுதி அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீடு மூலம் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். மற்றும் சிலர் பயிற்சி வகுப்புகள் இல்லாதது தங்களை தயார்படுத்திக்கொள்வதில் பின்னடைவு என்கின்றனர்.
அரசு பதவியேற்று வெகு சில நாட்களே ஆகியுள்ளதால் நீட் தேர்வை ரத்துசெய்ய சிறிது காலமாகலாம் என கூறும் கல்வியாளர்கள், மாணவர்கள் தேர்வை எழுத தங்களை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். தமிழகத்தில் நீட் தேர்வு தொடருமா என்பது குறித்து அரசு தெளிவான விளக்கத்தை தரவேண்டும் என்பதே மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதே நேரத்தில் மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ளவும் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே நிதர்சனம்.
நீட் தேர்வை எழுதும் மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் அரசு விரைந்து முடிவுசெய்து அறிவிக்கவேண்டும் என்றும் மாணவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்