ஒன்றிய அரசு என்ற சொல்லை கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையிலேயே பயன்படுத்துகிறோம் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது, அதில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், தமிழக அரசு பயன்படுத்திவரும் ஒன்றிய அரசு என்ற வார்த்தையைக் குறித்து கேள்வி எழுப்பினார்.
அவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “ஒன்றியம் என்பது தவறான சொல் அல்ல; ஒன்றிய அரசு என்ற சொல்லை கூட்டாட்சி தத்துவ அடிப்படையில் பயன்படுத்துகிறோம். மாநிலங்கள் ஒன்று சேர்ந்து இருப்பதே ஒன்றியம் என்பதற்கு பொருள். எனவே ஒன்றிய அரசு என கூறுவதைப் பார்த்து யாரும் மிரளத் தேவையில்லை, அதை சமூக குற்றமாக பார்க்கக்கூடாது”என்று தெரிவித்தார்.
மேலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல்வரியிலேயே, இந்தியா, அதாவது பாரதம் மாநிலங்களின் ஒன்றியம் என்ற வரிதான் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்