2020- 21 வரை 4,835 டன் கொரோனா மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டில் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், அதிகப்படியான கொரோனா மருத்துவக் கழிவுகளை வெளியேற்றுவதில் தமிழகம் இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. கேரளா முதல் இடத்திலும், குஜராத் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இந்தத் தகவலை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
“இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று பரவல் ஆரம்பித்த கால கட்டங்களில் இருந்து மருத்துவ கழிவுகள் அளவு அதிகரித்து உள்ளதா? அப்படியானால் மாநில வாரியாக அதன் விவரம் என்ன” என மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், அதில் “2017-18 ஆம் ஆண்டு தினசரி மருத்துவ கழிவு 531 டன், 2018-19 ஆம் ஆண்டில் 608 டன் தினசரி மருத்துவ கழிவுகளாக இருந்தவை 2019-20 காலகட்டங்களில் 615 டன் ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 2020 முதல் 2021 ஜூன் மாதம் வரை 56,898.14 டன் கொரோனா மருத்துவ கழிவுகள் உருவாகியுள்ளது” என தெரிவித்துள்ளது.
மாநில வாரியாக மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கியள்ள தரவுகளின் படி, 2020 ஜூன் முதல் 2021 ஜூன் வரை தமிழகத்தில் கொரோனா அல்லாத மருத்துவ கழிவுகள் 58.3 டன் ஆக உருவாகியுள்ளது. ஆனால், கொரோனா மருத்துவ கழிவுகள் 4,835.9 டன் ஆகும். இந்திய அளவிலே 3வது மாநிலமாக தமிழகத்தில் கொரோனா மருத்துவ கழிவுகள் அதிகம் உருவாகியுள்ளது எனவும், முதல் மாநிலமாக கேரளா மாநிலத்தில் 6442.2 டன் கொரோனா மருத்துவ கழிவுகளும், இரண்டாவது மாநிலமாக குஜராத் மாநிலத்தில் 5004.9 டன் கொரோனா மருத்துவ கழிவுகள் உருவாகியுள்ளது என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்