கரூரில் உள்ள கோயில் ஒன்றில் ஓய்வுபெற்ற போக்குவரத்துக்கழக ஊழியர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அப்போது அவர் ‘திமுக ஆட்சி வரவேண்டும் என்றும் செந்தில் பாலாஜி அமைச்சர் ஆக வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டேன். வேண்டுதல் நிறைவேறியதால் தற்கொலை செய்து கொள்கிறேன்’ என கடிதம் எழுதி வைத்துவிட்டு தீ வைத்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூகே அருகே மண்மங்கலத்தில் உள்ளது காளியம்மன் திருக்கோயில். இந்த கோயில்தான் மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் குலதெய்வ கோயில். இன்று காலை கோவிலுக்குள் வந்த நபரொருவர் தனது பையில் வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதைப்பார்த்த கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஆங்காங்கே சிதறி ஓடினர். தீ முற்றிலும் பரவி அந்த நபர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.
தீ வைத்துக் கொண்ட நபர் எழுதிவைத்த வாக்குமூல கடிதம் ஒன்று கிடந்துள்ளது. அந்த கடிதத்தில் ‘திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்றும் செந்தில் பாலாஜி அமைச்சர் ஆக வேண்டும் என்றும் நான் இந்த கோயிலில் வேண்டிக் கொண்டேன். வேண்டுதல் நிறைவேறியதால் நான் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்.” என எழுதியுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில் வளாகத்திற்குள் தற்கொலை செய்துகொண்ட நபர் லாலாபேட்டையைச் சேர்ந்த உலகநாதன் என்றும் இவர் போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்றும் கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்