Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'கைகளை இழந்தாலும் நம்பிக்கையை இழக்கவில்லை' - 4 பதக்கங்களால் இதயங்களை கவர்ந்த சீன வீரர்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாரா விளையாட்டு வீரர்களுக்கான பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் சீன நாட்டை சேர்ந்த பாரா நீச்சல் வீரர் ஜெங் தாவோ (Zheng Tao) நான்கு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். அதோடு இணையதளத்தின் ஊடாக உலக மக்களின் இதயங்களையும் கவர்ந்துள்ளார் அவர். 

image

யார் இவர்?

‘Armless Swimmer’ என பலராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் ஜெங் தாவோ. கடந்த 1990, டிசம்பர் 25-ஆம் தேதி சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள குன்மிங் நகரத்தில் பிறந்தவர். தற்போது அவருக்கு 30 வயது. 

எல்லோரையும் போல நல்ல உடல் வளத்துடன் பிறந்துள்ளார் ஜெங். இருந்தாலும் குழந்தை பருவத்தில் அவர் மீது மின்சாரம் பாய்ந்த காரணத்தினால் தனது இரண்டு கைகளையும் இழந்துள்ளார். 

கைகளை இழந்திருந்தாலும் நம்பிக்கையை துளி அளவு கூட இழக்கவில்லை அவர். அதன் பலனாக 13 வயதில் கைகளே இல்லாமல் நீச்சல் பழகியுள்ளார். அடுத்த ஆறு ஆண்டுகளில் சீனாவுக்காக உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு அசத்தினார். அதுதான் சர்வதேச அளவில் அவர் பங்கேற்று விளையாடிய முதல் போட்டி. அதன் பிறகு அவர் நீச்சல் குளத்தில் இறங்கினாலே பதக்கத்துடன் திரும்புவார் என்ற அளவுக்கு சாதனைகளை படைக்க துவங்கினார். அதோடு அவரது தனிப்பட்ட சாதனைகள் அனைத்தும் உலக சாதனைகளாக பொறிக்கப்பட்டன. 

image

2012 முதல் பாராலிம்பிக்!

லண்டனில் 2012-இல் நடைபெற்ற பாராலிம்பிக்கில் களம் கண்டார் ஜெங். அது தான் அவரது முதல் பாராலிம்பிக். இதுவரை ஆறு தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என மொத்தம் ஒன்பது பாராலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார். அதில் டோக்கியோ பாராலிம்பிக்கில் மட்டுமே அவர் நான்கு தங்கங்களை தனி ஒருவராக சீனாவுக்காக வென்றுள்ளார்.  

50 மீட்டர் பேக் ஸ்ட்ரோக், 50 மீட்டர் பட்டர்பிளை, 50 மீட்டர் ஃப்ரீஸ்டைல் மற்றும் கலப்பு 50 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ரிலே ஈவெண்டுகளில் டோக்கியோவில் தங்கங்களை வென்றுள்ளார் அவர். இதில் பட்டர்பிளை மற்றும் பேக் ஸ்ட்ரோக் ஈவெண்டில் உலக சாதனை படைத்து தங்கம் வென்றுள்ளார்.  

பாரா நீச்சல் வீரர்களுக்கான உலக சாம்பியன்ஷிப்பில் ஆறு பதக்கங்களை வென்றுள்ளார். அதில் நான்கு பதக்கங்கள் தங்கமாகும். 

image

மனங்களை கவர்ந்த மெசேஜ்!

டோக்கியோ நகரில் உலக சாதனை படைத்த பிறகு அங்கிருந்த கேமராவை பார்த்து தனது இரண்டு வயது மகளுக்கு ஒரே மெசேஜ் சொல்லி இருந்தார் ஜெங். அது தான் தற்போது உலக அளவில் பலரது மனங்களை கவர்ந்துள்ளது. அதோடு அவர் வென்றுள்ள நான்கு தங்கப் பதக்கங்களும் நெட்டிசன்களின் கவனத்தை பெற்றுள்ளது.  

“பார் மகளே பார். என்னால் கைகள் இல்லாமல் வேகமாக நீந்த முடிகிறது” என்பது தான் அந்த மெசேஜ். 

டோக்கியோ பாராலிம்பிக்கில் கலந்து கொள்ளும் நோக்கில் நாள் ஒன்றுக்கு பத்து கிலோ மீட்டர் தூரம் நீச்சல் பயிற்சி மேற்கொண்டாராம் ஜெங். அவரது உழைப்புக்கு ஏற்ற கூலியாக தங்கங்களை அறுவடை செய்துள்ளார். 

இதையும் படிக்கலாம் : பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை அவனி லேகாராவின் வெற்றிக்கதை!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்