திரிபுராவின் மூத்த பாஜக தலைவரும், சூர்மா தொகுதியின் எம்எல்ஏவுமான ஆஷிஸ் தாஸ், திரிபுரா பாஜக அரசின் தவறான செயல்களுக்காக கொல்கத்தாவின் புகழ்பெற்ற காளிகாட் கோவிலில் மொட்டை அடித்தார், அவர் விரைவில் திரிணாமுல் காங்கிரஸில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரிபுராவில் அரசியல் அராஜகம் மற்றும் குழப்பத்தை பாஜக வளர்த்து வருவதாக குற்றம் சாட்டிய அஷிஸ் தாஸ், மாநில அரசின் செயல்பாடுகளால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், அதனால் கட்சியை விட்டு விலக முடிவு செய்துள்ளதாகவும் கூறினார்.
இது தொடர்பாக பேசிய ஆஷிஸ் தாஸ், "பாஜக அரசாங்கத்தின் தவறான ஆட்சியின் காரணமாக இன்று நான் மொட்டையடித்துக்கொண்டேன். நான் கட்சியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளேன், எனது அடுத்த கட்டத்தை காலம் தீர்மானிக்கும். பாஜக தலைமையிலான ஆட்சியில் திரிபுராவில் அராஜகமும், தவறான ஆட்சியும் நடந்தது. அதனால் கடந்த இரண்டு வருடங்களாக நான் இந்த தவறான செயல்களை விமர்சித்து வந்தேன், கட்சி மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களுக்காக நான் பணியாற்றி வருகிறேன். மோடி நாட்டில் உள்ள பொது சொத்துகளை தனியாருக்கு விற்று வருகிறார், எனவே மம்தாதான் நாட்டின் பிரதமராக வேண்டும்"என்று கூறினார்.
தொடர்ந்து மம்தா பானர்ஜியைப் பாராட்டி வரும் ஆஷிஸ் தாஸ், அவர் பிரதமர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். 2023 ஆம் ஆண்டு திரிபுராவுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், ஆஷிஸ் தாஸ் திரிணாமுல் காங்கிரஸில் இணைவார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனைப்படிக்க...ரூ.15 உயர்ந்து ரூ.915-க்கு விற்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்