உ.பி.யில் வன்முறை நடந்த இடமான லக்கிம்பூருக்கு செல்ல ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க லக்கிம்பூருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான 5 பேர் கொண்ட குழு இன்று செல்லவிருந்த நிலையில், அவரது பயணத்திற்கு அம்மாநில அரசு இன்று காலை அனுமதி மறுத்தது. முன்னதாக நேற்றைய தினம் அங்கு சென்றிருந்த பிரியங்கா காந்தி நேற்றுமுன்தினம் அதிகாலை முதல் தடுப்புக்காவலில் உள்ளார்.
இதைத்தொடர்ந்து டெல்லியில் வைத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டவில்லை. இச்சம்பவம் நடந்த லக்கிம்பூர் செல்ல எனக்கு உ.பி. அரசு விதித்த தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் எங்களுக்கு இது பொருந்தாது என்றே நான் சொல்வேன். என்னையும் என் குடும்பத்தினரையும் துன்புறுத்தினாலும் நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்போம். காங்கிரஸ் அரசியல் செய்யவில்லை, இறந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு நியாயம்தான் கேட்கிறோம்.
தொடர்புடைய செய்தி: ”எங்கள் குடும்பத்தினரை துன்புறுத்தினாலும் நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்போம்” - ராகுல்
மட்டுமன்றி எதிர்க்கட்சிகளின் பணியே, அரசுக்கு அழுத்தம் கொடுப்பதுதான். எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தால் தான் இன்று அரசு தரப்பில் இந்த அளவிற்கு கூட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் அரசு கட்டுப்படுத்துகிறது. இவ்விவகாரத்தில் விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு தனது அகங்காரத்தின் காரணமாக நிராகரிக்கிறது” என்றார்.
ராகுல் பேட்டியளித்தை தொடர்ந்து தற்போது லக்கிம்பூர் செல்ல ராகுல், பிரியங்காவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உயிரிழந்த லக்கிம்பூர் கேரி பகுதிக்கு செல்ல ராகுல்காந்தி, பிரியங்கா காந்திக்கு உத்தரப்பிரதேச அரசு அனுமதி அளித்துள்ளது. அனுமதியை தொடர்ந்து டெல்லியில் இருந்து விமானம் மூலம் உத்தரப்பிரதேசத்தின் லக்னோவுக்கு ராகுல் காந்தி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் ஆகியோர் புறப்பட்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்