தீபாவளி பண்டிகையின் போது மக்கள் உள்நாட்டு தயாரிப்புகளையே வாங்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்த வாரங்களில் வர உள்ள நிலையில், மக்கள் உள்நாட்டு பொருட்களையே வாங்க வேண்டும் என்று மனதின் குரல் என்ற பெயரிலான மாதாந்திர வானொலி உரையில் பிரதமர் மோடி பிரதமர் கேட்டுக்கொண்டார். உள்நாட்டு பொருட்களை வாங்கினால் பிரகாசிப்பது பண்டிகைகள் மட்டுமல்ல, ஒரு ஏழை, ஒரு கைவினைக் கலைஞர், ஒரு நெசவாளியின் வீடும்தான் என பிரதமர் குறிப்பிட்டார். இந்திய பெண்கள் அனைத்து துறைகளிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர் என தெரிவித்த பிரதமர் மோடி, துணை ராணுவம் உள்ளிட்ட காவல் படைகளில் சேர்ந்துள்ள பெண்களின் எண்ணிக்கை கடந்த 7 ஆண்டுகளில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி திட்டத்தில் வெற்றி கிடைத்திருப்பது சவால்களை எதிர்கொள்ளும் இந்தியாவின் திறனை வெளிக்காட்டியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். ட்ரோன் தொழில்நுட்பம் தற்போது கொரோனா தடுப்பூசி வினியோகத்திலும் பயன்படுத்தப்படுவதாக பிரதமர் தெரிவித்தார். குஜராத்தில் வயல்களில் உரம் தெளிக்கும் பணியில் ட்ரோன்கள் ஈடுபடுத்தப்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். மத்திய கலாசார அமைச்சகம் சார்பில் நாடு தழுவிய கோலப் போட்டி நடத்தப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்