மனித கழிவை கையால் அள்ளச்சொல்லி துணை தாசில்தார் ஒருவர் துன்புறுத்தியதாக வயதான தம்பதியினர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை ஊராட்சி தியாகி செல்லத்துரை நகரைச் சேர்ந்தவர் அப்துல்ஹமீது 74. இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஆஷிகாபேகம் 68. இருவரும் மகள் மற்றும் பேரக்குழந்தையுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வயதான தம்பதியினருக்கும், அவர்களது வீட்டின் அருகே வசிக்கும் துணை தாசில்தார் ஒருவருக்கும் இடையே இடம் சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, துணை தாசில்தார் முதியவரின் வீட்டின் மீது கல்லை எறிந்து கதவை உடைத்ததோடு, அவருடைய வீட்டிற்கு வருமாறு அழைத்ததாகவும், எதற்கு என்று கேட்டதற்கு, வா என்று கூறி ஆபாசமாக திட்டி அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அங்கு சென்றபோது கொல்லைப்புறத்தில் இருந்த மனிதக் கழிவை கையால் அள்ளச்சொல்லியதோடு, அந்த பகுதி முழுவதும் தண்ணீர் ஊற்றி கழுவச்சொல்லி அதனை வீடியோ எடுத்ததாகவும், ஏன் என்று கேட்டதற்கு, ’’எனது வீட்டில் நீதான் மனிதக் கழிவை கொட்டினாய். அதனால் தான் உனக்கு இந்த தண்டனை’’ என்று கூறி தன்னை கேவலப்படுத்தியதாக வயதான தம்பதியினர் மனு கொடுத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து நியாயம் கேட்பதற்கு வந்ததாக முதியவர் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்