வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே தமிழகத்தில் சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்துவருகிறது. இந்நிலையில் தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் நாளை இடி, மின்னலுடன்கூடிய மழைபெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை இருக்கும் எனவும், அதன்பிறகு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 30லிருந்து 40 கி.மீ வேகத்தில் காற்றுடன் இடி, மின்னலுடன்கூடிய கனமழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. 14ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல்லில் கனமழை பெய்யும் எனவும், 15ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி மாவட்டங்களில் இடி, மின்னல், காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் 18ஆம் தேதிக்குப்பிறகே வெப்பநிலை உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்